Wednesday, November 05, 2014

'கடுகு சிறுத்தாலும்... காரம் குறையாது!

நம்ம ஊரு வைத்தியம் - 3
எட்வர்ட்
ஹெல்த்
'கடுகு சிறுத்தாலும்... காரம் குறையாது!' காரம் மட்டுமில்லீங்க... அதுல மருத்துவ குணங்களுக்கும் குறைவில்லை. அதனாலதான், நம்மோட பெரும்பாலான சமையல்லயும் அதுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. எந்த சமையலா இருந்தாலும், அதைத் தாளிக்கறதுக்கு கடுகை பயன்படுத்தறத பழக்கப்படுத்திட்டு போயிருக்காங்களே... புண்ணியவானுங்க அதைத்தான் பெருமையோட சொல்றேன்!
கை-கால் வலி, மூட்டுவலி, வாயு பிடிப்பு, அடிபட்டு ரத்தம் கட்டுதல்னு பலவித பிரச்னைகளுக்கும் கடுகு நல்ல பலன் கொடுக்கும். பாதிக்கப்பட்ட இடத்துல பூசுறதுக்கு தேவையான அளவு கடுகை எடுத்து, தண்ணி விட்டு அரைச்சுக்கங்க. பிறகு, அதை லேசா சூடு காட்டி பத்து போட்டா... கை-கால் வலியில இருந்து எல்லா பிரச்னைகளும் சரியாகும். தேவைப்பட்டா... கொஞ்சம் பெருங்காயமும் சேர்த்துக்கிடலாம்.
மேல சொன்ன பிரச்னைகளுக்கே... இன்னொருவிதமான கடுகு வைத்தியமும் கைவசம் இருக்கு. அதாவது... 10 கிராம் முருங்கைப்பட்டை, பெருங்காயம் ஒரு புளியங்கொட்டை அளவு, கடுகு ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணி விட்டு மையா அரைக்கணும். பிறகு, அதை கொதிக்க வெச்சு பொறுக்குற சூட்டுல பத்து போட்டா... எல்லா வலிகளும் பறந்துரும். ஒருநாளைக்கு ஒருவேளை வீதம், மூணு நாளைக்கு இப்படி பூசிட்டு வந்தா... நல்ல குணம் கிடைக்கும்.
சிலர் தொடர்ந்து இருமிக்கிட்டே இருப்பாங்க. இதுக்கு கடுகை பொடியாக்கி, அரை கிராம் அளவு எடுத்து தேன் சேர்த்து காலை, மாலைனு 2 நாள் சாப்பிட்டு வந்தா... கட்டாயம் பலன் கிடைக்கும்.
இப்படித்தான் 25 வயசு மதிக்கக் கூடிய ஒரு இளைஞர் தொடர் இருமல்ல அவதிப் பட்டிருக்கார். இதுக்கு என்னென்னவோ சிகிச்சை எடுத்தும் பலன் கிடைக்கல. இருமி கிட்டே என்கிட்ட வந்து விஷயத்தைச் சொன்னார். 'இந்த கடுகுப்பொடியை சாப்பிடுங்க..'னு சொல்லி அனுப்பினேன். சொன்னபடியே ரெண்டு நாளைக்குச் சாப்பிட்டவர்... ''ஐயா, நீங்க சொன்னபடியே இருமல் நின்னுபோச்சு''னு அவர் போன் பண்ணினப்ப, எனக்கு அத்தனை சந்தோஷம்!  
- நோய்கள் விலகும்...

Thursday, October 30, 2014

பலம் தரும் பஞ்சகவ்யா... விரட்டியடிக்கும் வசம்பு...

பலம் தரும் பஞ்சகவ்யா... விரட்டியடிக்கும் வசம்பு...
வெகுமதி கொடுக்கும் வெள்ளைப் பொன்னி!
காசி.வேம்பையன்
பளிச்... பளிச்...
ஆண்டுக்கு ஒரு முறை தொழுவுரம்.
ஒரு சிம்புக்கு, 325 நெல்மணிகள்.
ஏக்கருக்கு 30 மூட்டை.
வீரிய ரக விதைகளாக இருந்தாலும் சரி... பாரம்பரிய ரக விதைகளாக இருந்தாலும் சரி... அதிக பாடும் இல்லாமல்... பண்டுதமும் பார்க்காமல்... எளிதான சாகுபடி மூலமாகவே... நிறைவான லாபத்தைப் பார்ப்பதுதான் இயற்கை வழி விவசாயச் சூத்திரத்தின் குறிக்கோள்!
இதைச் சரியாகப் புரிந்துகொண்ட விவசாயிகளில் ஒருவராக, இயற்கை முறையில் வெள்ளைப் பொன்னி ரக நெல்லை சாகுபடி செய்து அசத்தலான வெற்றியை அறுவடை செய்து வருகிறார்... திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த்.
''பரம்பரையா விவசாயம்தான் தொழில். நெல் அரவை மில், உரக்கடையெல்லாம் அப்பா வெச்சுருந்தார். நான் ஊட்டி கான்வென்ட் ஸ்கூல்ல படிச்சுட்டிருந்தேன். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பத்தியும், அவர் இயற்கை விவசாயம் செஞ்சதைப் பத்தியும் ஸ்கூல்ல தெரிஞ்சுக்கிட்டேன். அதையெல்லாம் லீவுக்கு வரும்போது, அப்பாகிட்ட சொல்லுவேன். அதையெல்லாம் கேட்டுட்டு, கொஞ்சம் கொஞ்சமா ரசாயன உரத்தைக் குறைக்க ஆரம்பிச்சார்.
நான் எம்.பி.ஏ முடிச்சுட்டு, சென்னையில வேலைக்குச் சேர்ந்தேன். 2003-ம் வருஷம் அப்பா இறந்துட்டார். அதிலிருந்து விவசாயத்தைப் பாக்க ஆரம்பிச்சுட்டேன்'' என்று முன்கதை சொன்ன ஆனந்த், தொடர்ந்தார் தன் விவசாய அனுபவங்களை.
இணையம் மூலம் இயற்கை!
''மில்லுக்குப் பக்கத்துலேயே இருந்த மூணு ஏக்கர் நிலத்துல, எனக்குத் தெரிஞ்சளவுக்கு இயற்கை வழி விவசாயத்தைச் செய்ய ஆரம்பிச்சேன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரோட பயிற்சியில கலந்துக்கற வாய்ப்பு கிடைக்கவே... பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன். இண்டர்நெட் மூலமாவும் நிறைய தகவல்களைத் தேடிப்பிடிச்சேன். எல்லாத்தையும் சோதனை அடிப்படையில செயல்படுத்திப் பார்த்தேன். அதுல பூச்சிகளை விரட்டுறதுக்கு வசம்புக் கரைசல் நல்ல பலன் கொடுத்தது. அதைத் தெளிக்கிறப்போ பயிர்களுக்கு நோயும் வர்றதில்லை. அதனால, அதையும் பஞ்சகவ்யாவையும் மட்டும்தான் தொடர்ந்து பயன்படுத்திக்கிட்டிருக்கேன்.
இப்போ, ஒன்றரை ஏக்கர்ல நெல் சாகுபடி பண்ணிக்கிட்டிருக்கேன். மீதி நிலத்துல காய்கறி, எள், உளுந்து, கடலைனு மாத்தி மாத்தி சாகுபடி செய்றேன். ஒருபோகம் குள்ளங்கார் ரக நெல் விதைச்சா... மறுபோகம் வெள்ளைப் பொன்னி போடுவேன். இப்படி மாத்தி மாத்தி விதைப்பேன். சராசரியா, ஏக்கருக்கு 30 மூட்டை (75 கிலோ மூட்டை) அளவுக்கு மகசூல் கிடைக்குது. இதோ... சம்பா பட்டத்துல போட்ட வெள்ளைப் பொன்னி அறுவடைக்குத் தயாரா இருக்குது''
-அனுபவப் பாடத்தை முடித்த ஆனந்த், ஒன்றரை ஏக்கருக்கான வெள்ளைப் பொன்னி சாகுபடிப் பாடத்தை ஆரம்பித்தார்.
அனைத்துப் பட்டங்களும் ஏற்றவை!
'வெள்ளைப் பொன்னி ரகத்துக்கு வயது 180 நாட்கள். அனைத்து வகை மண்ணிலும் நன்றாக வரும். அனைத்துப் பட்டங்களுக்கும் ஏற்றது. ஒற்றை நாற்று முறையில் சாகுபடி செய்ய, ஒன்றரை ஏக்கர் நிலத்துக்கு 7 கிலோ விதைநெல் தேவை. நாற்றங்காலுக்காக 2 சென்ட் நிலத்தில் களைகளை அகற்றி, இரண்டு சால் உழவு செய்து, சேறாக மாற்றி சமப்படுத்தி, ஒரு கூடை தொழுவுரத்தைத் தூவ வேண்டும். விதைநெல்லுடன், தலா 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா மற்றும் 100 கிராம் சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து, சணல் சாக்கில் இட்டு 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, 36 மணி நேரம் இருட்டில் வைத்திருந்து... நாற்றங்காலில் இரண்டு அங்குல உயரத்துக்கு தண்ணீர் நிறுத்தி விதைக்க வேண்டும்.
15 நாளில் நாற்று!
விதைத்த பிறகு, தண்ணீரை வடித்துவிட வேண்டும். தொடர்ந்து, ஐந்து நாட்கள் வரை தினமும் ஒரு மணி நேரம் மட்டும் தண்ணீர் கட்டி வைத்து வடித்துவிட வேண்டும். அதன்பிறகு, தொடர்ந்து வழக்கம்போல தண்ணீர் கட்டி வர வேண்டும். 10-ம் நாள், தண்ணீரோடு 5 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்துவிட வேண்டும். 15-ம் நாளுக்கு மேல் நாற்று தயாராகி விடும்.
ஆண்டுக்கொருமுறை தொழுவுரம்!
நாற்றங்கால் தயாரிக்கும்போதே வயலையும் தயார் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஏக்கருக்கு 5 டன் என்ற கணக்கில் தொழுவுரத்தை இட்டு, நன்கு உழவு செய்ய வேண்டும் (தொடர்ந்து இயற்கை வேளாண்மை செய்பவர்கள்... ஆண்டுக்கு ஒரு முறை தொழுவுரம் இட்டால் போதுமானது. ஒவ்வொரு போகத்துக்கும் இட வேண்டியதில்லை).
ரோட்டாவேட்டர் மூலம் நிலத்தை சேறாக்கிக் கொள்ள வேண்டும். ரெண்டு கூடை எருவில் ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், ஒரு கிலோ பாஸ்போ-பாக்டீரியா, அரை கிலோ சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து, நிலத்தில் தூவ வேண்டும். பிறகு, ஓரடி இடைவெளியில், குத்துக்கு இரண்டு நாற்றுகள் வீதம் நடவு செய்ய வேண்டும். ஒரு நாற்று பட்டுப்போனாலும் ஒரு நாற்று பிழைத்துக் கொள்ளும்.
15 நாளுக்கொரு முறை பஞ்சகவ்யா!
நடவில் இருந்து 25 நாட்கள் வரை வேர் மறையும் அளவுக்கு மட்டும் தண்ணீர் நிறுத்த வேண்டும். அப்போதுதான் நன்கு வேர் பிடித்து வளரும். அதன்பிறகு, அரையடி அளவுக்கு தண்ணீர் நிறுத்த வேண்டும். 15-ம் நாள், 150 லிட்டர் தண்ணீரில் நான்கரை லிட்டர் பஞ்சகவ்யா, நான்கரை லிட்டர் வசம்புக் கரைசல் (10 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ வசம்பை இடித்து, 15 நாட்கள் ஊற வைத்தால் வசம்புக் கரைசல் தயார்) ஆகியவற்றைக் கலந்து வயல் முழுவதும் தெளிக்க வேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை இதேபோலத் தெளித்து வர வேண்டும்.
நடவு செய்த 25  மற்றும் 60-ம் நாட்களில் கோனோவீடர் மூலம் களைகளை அழுத்தி விட வேண்டும். 120-ம் நாளில் கதிர் பிடித்து, 150-ம் நாளுக்கு மேல் முற்றி, 170-ம் நாளில் அறுவடைக்குத் தயாராகி விடும்.'
54 ஆயிரம் வருமானம்!
சாகுபடிப் பாடத்தைத் தொடர்ந்து மகசூல் மற்றும் வருமானம் பற்றி சொன்ன ஆனந்த், ''இதோ பாருங்க... வெள்ளைப் பொன்னியில ஒவ்வொரு தூர்லயும் முப்பத்தஞ்சுல இருந்து நாப்பது சிம்பு வரைக்கும் இருக்குது. ஒரு சிம்புக்கு, முன்னூறுல இருந்து மூன்னூத்தியிருபத்தஞ்சு மணிகள் இருக்குது. அறுவடை செய்யுறப்போ... எப்படியும் ஒண்ணரை ஏக்கர்ல இருந்து 50 மூட்டை (75 கிலோ மூட்டை) நெல் வரைக்கும் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன். எப்படிப் பார்த்தாலும் 45 மூட்டைக்குக் குறையாது.
இப்போதைக்கு மார்க்கெட் நிலவரப்படி மூட்டைக்கு 1,200 ரூபாய் கிடைக்குது. இதன்படி பார்த்தா... 45 மூட்டை நெல்லுக்கு 54 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவு போக, எப்படியும் 33 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும்'' என்றார், மகிழ்ச்சியாக.

Friday, October 17, 2014

தண்ணீரில் இத்தனை வகைகளா?

மண்புழு மன்னாரு
தண்ணீரில் இத்தனை வகைகளா?
ஓவியம்: ஹரன்
மாத்தி யோசி
மாமன்னர் அக்பரும், அவரது மந்திரி பீர்பாலும் அரண்மனைத் தோட்டத்தைச் சுத்திப்பார்க்கப் போனாங்க. அப்போ, ''நம்நாட்டில் எந்தத் தொழிலை அதிக மக்கள் செய்கிறார்கள்... விவசாயமா, வியாபாரமா, படைத்தொழிலா?''னு அக்பர் கேட்டாரு.
உடனே, ''அதிகப்படியானோர் மருத்துவர் வேலைதான் செய்கிறார்கள்''னு பதில் சொன்னாரு பீர்பால்.
இதைக்கேட்டதுமே மூக்கு மேல கோபம் வந்துடுச்சு அக்பருக்கு. ''நாட்டின் பிரதான தொழில் விவசாயம்தான். நீயோ மருத்துவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள் என்று சொல்கிறாய். உனக்கு சித்தம் எதுவும் கலங்கிவிடவில்லையே?''னு கடுகடுத்தாரு.
''இல்லை மன்னா... நீங்கள் கேட்ட கேள்விக்கு, சரியான பதிலைத்தான் சொல்கிறேன்''னு விடாக்கண்டன் கணக்கா சொன்னாரு பீர்பால்.
''வரவர உனக்கு மூளை மழுங்கிக்கொண்டே போகிறது'னு கோபமா சொல்லிட்டு, அந்தபுரத்துக்குப் போயிட்டாரு அக்பர்.
மறுநாள் அரசவைக் கூட்டத்துக்கு, மந்திரிங்க எல்லாரும் வந்துட்டாங்க... பீர்பால் தவிர.
''பீர்பால் எங்கே?''னு கேட்டாரு அக்பர்.
''அவருக்குக் கடுமையான காய்ச்சல். அதனால் வரவில்லை என்று தகவல் வந்துள்ளது அரசே''னு பதில் சொன்னாங்க.
''சாதாரண காய்ச்சலுக்காகவா, அரசவைக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறார். சுக்கு கஷாயம் போட்டு குடித்துவிட்டால், காய்ச்சல் போய்விடப் போகிறது''னு சொல்லி, பக்கத்துல இருந்த சேவகனைக் கூப்பிட்டு, ''உடனே சென்று பீர்பாலை அழைத்து வா''னு உத்தரவு போட்டாரு அக்பர்.
கொஞ்ச நேரத்துல கம்பளியை, சுருட்டிப் போத்திக்கிட்டு, நடுங்கிக்கிட்டே வந்த பீர்பாலைப் பார்த்த அக்பர், ''உனக்கு நடுங்குகிறதே. குளிர்காய்ச்சலாக இருக்கும். இதற்கு நீ சுக்குடன், கொஞ்சம் கொத்தமல்லியையும் சேர்த்து...''னு சொல்ல ஆரம்பிச்சதும், ''நூற்று நாற்பத்தேழு''னு சொன்னாரு பீர்பால்.
அக்பர், ஒண்ணும் புரியாம, ''என்னது நூற்று நாற்பத்தேழு?''னு கேட்டாரு.
''மன்னா, இன்று காலையில் காய்ச்சல் என்று நான் சொன்னதில் இருந்து, என் மனைவி, பக்கத்து வீட்டுக்காரர், தெருவில் பார்த்தவர்கள், வாயில் காப்போன், அரண்மனை சேவகன் என இதுவரை நூற்று நாற்பத்தாறு பேர் வைத்தியம் சொல்லி இருக்கிறார்கள். இப்போது அரசர் வேலையை விட்டுவிட்டு, நீங்களும் வைத்தியர் வேலை செய்ய வந்துவிட்டீர்கள். ஆக, நம்நாட்டில் எந்தத் தொழிலை அதிக மக்கள் செய்கிறார்கள் என்பது மன்னருக்கே விளங்கியிருக்கும்''னு பீர்பால் சொன்னதும், அவரோட மதிநுட்பத்தைப் பாராட்டிப் பரிசு கொடுத்தாராம் அக்பர்.
மருத்துவர்னு தனியா ஒண்ணும் தேவையில்ல. நமக்கு நாமே மருத்துவர்ங்கிற கணக்கா, ஒவ்வொருத்தருமே உடம்பைப் பத்தி தெரிஞ்சு வெச்சுருக்கிறதுதான் நல்லது. இதைத்தான் அந்தக் காலத்துல நம்ம முன்னோருங்க செய்துக்கிட்டிருந்தாங்க. தனக்குத் தானே வைத்தியமும் பார்த்துக்கிட்டிருந்தாங்க. ஆனா, நாடு முழுக்க இருந்த இந்த மருத்துவ அறிவு, கம்ப்யூட்டர் காலத்துல கொஞ்சம், கொஞ்சமா சரிஞ்சுடுச்சுங்கிறதுதான் வேதனை. நம்மநாட்டு பாரம்பரிய மருத்துவ அறிவுபோல, வேற எந்த நாட்டுலயும் இருக்கிறதுக்கு வாய்ப்பு குறைவு. உதாரணத்துக்கு ஒரு விஷயத்தைப் பார்க்கலாம்.
தண்ணியில, எத்தனை வகை இருக்குனு கேட்டா... நல்ல நீர், உப்பு நீர்னு சொல்லுவோம். ஆனா, பல நூறு வருஷத்துக்கு முன்ன வாழ்ந்த தேரையர் சித்தர்... 18 வகை நீர் இருக்கிறதா சொல்லியிருக்கிறாரு. 1. மழைநீர், 2. ஆலங்கட்டிநீர், 3. பனிநீர், 4. ஆற்றுநீர், 5. குளத்துநீர், 6. ஏரிநீர், 7. சுனைநீர், 8. ஓடைநீர், 9. கிணற்றுநீர், 10. ஊற்றுநீர், 11. பாறைநீர், 12. அருவிநீர், 13. அடவிநீர், 14. வயல்நீர், 15. நண்டுக்குழிநீர், 16. உப்புநீர், 17. சமுத்திரநீர், 18. இளநீர்... இப்படியிருக்கிற இந்த நீர் ஒவ்வொண்ணுக்கும் வெவ்வேற மருத்துவத் தன்மைங்க இருக்குது.
எந்த மண்ணுல விளையுற காய்கறிகளை, எப்படி சாப்பிடணும்னு 'பதார்த்த குண சிந்தாமணி’ நூல்ல விளக்கமா எழுதி வெச்சிருக்காரு தேரையர் சித்தர். .
ஒவ்வொரு  தண்ணிக்கும், ஒரு குணம் உண்டு. உதாரணத்துக்கு ஒரு விஷயத்தைச் சொல்றேன்... இன்னிக்கும்கூட குளூக்கோஸ் கிடைக்காத சமயத்துல, அவசர சிகிச்சைக்கு இளநீரை மனித உடம்புல ஏத்துற ஆங்கில மருத்துவருங்க உண்டு. ஆடு, மாடுகளுக்கு அவசர சிகிச்சை செய்யும்போதும், இளநீரை, குளூக்கோஸுக்கு பதிலா கொடுக்கிறாங்க. இந்த இளநீரை மரத்துல இருந்து கயிறு கட்டித்தான் இறக்கணும். ஏன்னா, இளநீர் 'பொத்’னு கீழ விழுந்தா கலங்கிடும். கலங்குன இளநீரை உடம்புக்குள்ள செலுத்தினா ரத்தக் குழாயில அடைச்சுடும். ஆக, ஒரு மருத்துவத்தை எப்படி செய்யணும்ங்கிற மருத்துவ அறிவு நம்மநாட்டு மக்களோட எந்த அளவுக்கு இருந்திருக்கும்ணு நினைச்சுப் பாருங்க!

Thursday, October 16, 2014

களாக்காய்...

களாக்காய்...
உயிர்வேலிக்கு உத்தரவாதம்...வருமானத்துக்கு ஆதாரம்!
'நாளை கிடைக்கப்போகும் பலாக்காயைவிட இன்று கிடைக்கும் களாக்காய் சிறந்தது’ என்பது, முதுமொழி. இதை உண்மை என்று நிரூபித்து வருகிறார், விழுப்புரம் மாவட்டம், ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்த லஷ்மிநாராயணன். ''நிலத்துக்கு வேலியாக இருந்து, உண்பதற்கு காய்களையும் கொடுக்கும் களாக்காயை வணிகரீதியாக வளர்த்தால், அதிக செலவில்லாமல் நல்ல வருமானம் பார்க்கலாம்'' என்பதற்கு தன்னுடைய தோட்டத்தை உதாரணமாக்கி வைத்திருக்கிறார், லஷ்மிநாராயணன்.
தோட்டம் தேடிப்போன நம்மை அன்போடு வரவேற்ற லஷ்மிநாராயணன், கடகடவென பேச ஆரம்பித்தார். ''10-ம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். 26 வருஷமா விவசாயம் பார்க்குறேன். குடும்பத்துக்குச் சொந்தமா 22 ஏக்கர் நிலம் இருந்துச்சு. வழக்கமா நெல், மணிலா, கரும்பு மாதிரியான பயிர்களை வெப்பேன். கிடைச்ச வருமானத்துல பக்கத்துல இருந்த நிலங்களை வாங்கி சேர்த்ததுல, இப்ப 27 ஏக்கர் நிலம் இருக்கு. 15 வருஷத்துக்கு முன்ன வேலையாட்கள் பிரச்னை, தண்ணீர் பிரச்னைனு வந்ததும், பெரும்பகுதி நிலத்துல சப்போட்டா, கொய்யா, மா இப்படி பழ மரங்களை நட்டுட்டேன். சப்போட்டாவும், மாவும் வருஷத்துக்கு ஒரு தடவை மட்டும் மகசூல் கொடுக்குறதால பராமரிப்பு செய்றது சுலபமா இருந்தது. கொய்யா மரங்களைப் பொறுத்தவரை அதிகமான பராமரிப்புத் தேவைப்பட்டாலும், நல்ல விலை கிடைக்கிறதால, தொடர்ச்சியா சாகுபடி செய்றேன்.
திருட்டைத் தடுத்த களாக்காய் செடிகள்!
16 ஏக்கர்ல கொய்யா, ஒரு ஏக்கர்ல சப்போட்டா, 5 ஏக்கர்ல மா, ஒரு ஏக்கர்ல சவுக்கு, 4 ஏக்கர்ல செங்கல் சூளை, எடைமேடையும் இருக்கு. நிலம் முழுக்க ரோட்டு ஓரத்துலயே இருக்குறதால ஆரம்பத்துல கம்பிவேலி போட்டேன். அதுக்கு அதிக செலவு ஆச்சு. ஆனாலும், ஆடு, மாடுகளை மட்டும்தான் கட்டுப்படுத்த முடிஞ்சுது. திருட்டைக் கட்டுப்படுத்த முடியல. நண்பர்கள்கிட்ட ஆலோசனை கேட்டப்போதான், 'களாக்காய் செடிகளை வேலியா வளர்த்தா... யாரும் உள்ள வர முடியாது'னு சொன்னார். உடனே செங்கத்துல இருந்து அஞ்சு படி (சுமார் 10 கிலோ) களாக்காய் பழம் வாங்கிட்டு வந்து விதை எடுத்து, காய வெச்சு முளைக்க வைச்சேன். அதெல்லாம் சரியா முளைக்கல. ஒரு தடவை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு போயிருந்தப்போ, ஆந்திராவுல இருந்து ஒரு வியாபாரி களாப் பழங்களைக் கொண்டு வந்திருந்தார். அவர்கிட்ட பேசினப்பதான் தெரிஞ்சுது, களாக்காய் விதைகளைக் காய வெச்சா முளைக்காதுங்குற விஷயம். நாத்துவிட்டு முளைக்க வைக்கிற தொழில்நுட்பத்தை அவர்தான் சொல்லிக்கொடுத்தார். அவர்கிட்டயே 25 கிலோ பழம் வாங்கிட்டு வந்து, அவர் சொன்ன முறையில நாத்து தயாரிச்சு, தேவையான இடங்கள்ல மட்டும் முக்கோண முறையில நட்டு விட்டேன். எல்லா செடிகளும் நல்ல முறையில வேர் பிடிச்சு வளர்ந்திடுச்சு. 12 ஏக்கர் நிலத்துல, சுமார் ஆயிரம் மீட்டர் அளவுக்குத் தேவைக்கு ஏத்த மாதிரி வேலியா நட்டு விட்டிருக்கேன்'' என்று சொல்லி வியப்பைக் கூட்டினார் லஷ்மிநாராயணன், தொடர்ந்தார்.
ஒரு வருடத்தில் வேலி!
''நட்ட ஒரு வருஷத்துல நல்ல வேலியா மாறிடுது. ஆடு, மாடுகள், மனிதர்கள் யாரும் உள்ள நுழைய முடியாது. நமக்குத் தேவையான உயரத்துக்கு வளரவிட்டு கவாத்து பண்ணிக்க லாம். கவாத்து செய்யாட்டியும் பிரச்னை இல்லை. மூணு வருஷத்துல காய் காய்க்க ஆரம்பிச்சிடும். ஒவ்வொரு வருஷமும் மே மாசம் பூவெடுத்து, ஆகஸ்ட் மாசத்துல இருந்து அக்டோபர் மாசம் வரை, காய் அறுவடை செய்யலாம். 1,000 மீட்டர் நீளத்துக்கு வெச் சிருக்கிற செடிகள்ல இருந்து, 1,000 கிலோ காய் கிடைக்கும். வேலியோரமா இருக்கறதால, ரோட்டுல போறவங்களும் பறிச்சுடறாங்க. எல்லாம் போக, வருஷத்துக்கு 200 கிலோ காய் கிடைக்குது. போன வருஷம் 100 கிலோ காயை, கிலோ அம்பது ரூபாய்னு விற்பனை செஞ்சேன். இந்த வருஷம் பழுக்க விட்டு நாத்து விட்டு, மீதி இடங்கள்ல நடலாம்னு இருக்கேன். இதுல மகசூல் கிடைக்கிறதைவிட, கம்பி வேலிக்கு பதிலா அதிக செலவில்லாத மாற்றா இருக்குறதுதான் விஷயமே!'' என்று சந்தோஷ மாகச் சொன்னார்!
தொடர்புக்கு,
லஷ்மிநாராயணன்,
செல்போன்: 94888-63995

காட்டுப்பழங்களில் இருந்து செடிகள்!
 களாக்காய் சாகுபடி செய்யும் விதம் பற்றி லஷ்மிநாராயணன் தந்த தகவல்கள், இங்கே பாடமாக-
'குத்துச்செடி என்றழைக்கப்படும் வகையைச் சேர்ந்ததுதான் களாக்காய். இதன் குறைந்தபட்ச ஆயுள் 25 ஆண்டுகள். காட்டில் கிடைக்கும் பழங்கள் அல்லது சந்தையில் கிடைக்கும் பழங்களின் விதைகளை பயன்படுத்தலாம். சந்தைகளில் விற்பனை செய்யப்படும் களாக்காய் பழங்களை வாங்கி, இரண்டு நாட்கள் வைத்திருந் தால், லேசாக அழுகிய நிலைக்கு மாறிவிடும். பிறகு, வாய் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் பழங்களைப் பிசைந்து விட்டால்... விதைகள் அடியில் தங்கிவிடும். அவற்றைச் சேகரித்து, சாம்பல் தூளில் கலந்து வைத்துக் கொள்ளவேண்டும்.
18 அடி நீளம், 8 அடி அகலம் என்ற அளவு நிலத்தில் மண்வெட்டியால் கொத்திக் களைகளை நீக்கி... மண்ணைப் பொலப்பொலப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும். இதன் மீது
50 கிலோ எருவைத் தூவிவிட்டு, ஓர் அங்குல இடைவெளியில், ஒவ்வொரு விதையையும் தனித்தனியாக விதைக்க வேண்டும். விதைத்த நாளிலிருந்து ஒரு மாதம் வரை, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்துவிட வேண்டும். அதற்குமேல், செடி வாடினால் மட்டும் தண்ணீர் கொடுத்தால் போதுமானது. நாற்றுகளில் பூச்சித்தாக்குதல் தென்பட்டால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 50 மில்லி வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம். நான்கு முதல் ஐந்து மாதங்களில் நாற்று, ஒன்றரை அடி உயரத்துக்கு வளர்ந்து நடவுக்குத் தயாராகி விடும்.
100 மீட்டருக்கு 2 ஆயிரம் செடிகள்!
மழைக்காலமான அக்டோபர்-நவம்பர் மாதங்களில், நடவு செய்யலாம். ஓர் அடி இடைவெளியில் முக்கோண முறையில் கடப்பாரையால் குழி இட்டு, செடியை நட்டுவிட்டால் போதுமானது. 100 மீட்டர் நீளத்துக்கு நடவு செய்வதற்கு, இரண்டு கிலோ பழத்தில் உற்பத்தி செய்த 2 ஆயிரம் செடிகள் போதுமானவை. நடவு செய்த 6 மாதங்கள் வரையில், மண்ணின் ஈரத்தைப் பொறுத்து, 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதற்குமேல் தனியாக தண்ணீர் கொடுக்கத் தேவையில்லை. மற்ற செடிகளுக்குப் பாயும்போது, கிடைக்கும் தண்ணீரை களாக்காய் செடிகள் எடுத்துக்கொள்ளும். நடவு செய்த ஆறு மாதங்களுக்கு, இவற்றை வெள்ளாடுகள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
6-ம் மாதத்தில் செடி இரண்டரை அடிக்கு மேல் வளர்ந்து விடுவதால், பராமரிப்புத் தேவையிருக்காது. பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது. தனியாக இதற்கு எந்தவிதமான இடுபொருட்களும் கொடுக்கத் தேவையில்லை.'
 செர்ரி தயாரிக்க, களாக்காய்!
களாக்காய் பற்றி பெரியகுளம் தோட்டகலைக் கல்லூரி, பழப்பயிர்கள் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ''களாக்காய் ஆங்கிலத்தில் 'கரோன்டா' (ளீணீக்ஷீஷீஸீபீணீ) என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட களாக்காய் செடிகளின் அறிவியல் பெயர், 'கரிஸ்ஸா கரன்டாஸ்' (சிணீக்ஷீவீssணீ நீணீக்ஷீணீஸீபீணீs). வெப்பமண்டலப் பகுதிகளில் வளரக்கூடிய இந்தச் செடிகள், இந்தியா முழுவதும் பல பகுதிகளில் காட்டுச்செடியாக மட்டுமே உள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோவிந்த பல்லபந்து வேளாண்மைப் பல்கலைக்கழகம், களாக்காயில் புதிய ரகத்தை உருவாக்கி இருக்கிறது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் வறட்சியான பகுதிகளில் சாகுபடி செய்யும் பயிராக இதை அறிவித்துள்ளது. இவற்றின் காய் மற்றும் பழங்கள் புளிப்புச் சுவையுடன் இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுகின்றனர்.
காய்கள், ஊறுகாய் தயாரிக்கப் பயன்படுகின்றன. விதை நீக்கம் செய்யப்பட்ட களாக்காயை நிறமேற்றி, சர்க்கரை பாகில் ஊற வைத்து பேக்கரிகளுக்குத் தேவையான 'செர்ரி’ தயாரிக்கிறார்கள். இவற்றின் நாற்றுகளை விதை மற்றும் கட்டிங் மூலம் உற்பத்தி செய்யலாம். எங்கள் கல்லூரியை அணுகினால், தேவையின் பெயரில், நாற்றுகளை உற்பத்தி செய்து கொடுப்போம்'' என்று சொன்னார்.
தொடர்புக்கு:
தலைவர் மற்றும் பேராசிரியர்,
பழப்பயிர் துறை, பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி.
தொலைபேசி: 04546-231726/233225.

Tuesday, October 07, 2014

மண்ணைப் பொன்னாக்கும் மலைவேம்பு !

வாழ்க மரம்... வளர்க பணம் !
மண்ணைப் பொன்னாக்கும் மலைவேம்பு !
 இரா.ராஜசேகரன்
நட்டு வைத்த மரம், பொட்டியில் கட்டி வைத்த பணத்துக்கு ஒப்பானது. இந்த உலகில் பலகோடி மரங்கள் இருந்தாலும், நமது மண்ணுக்கேற்ற, விலை மதிப்புள்ள, விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் பயனளிக்கக் கூடிய முக்கியமான சில மரங்களைப் பற்றி இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம். அதில் முதலாவது... முக்கியமானது... மிக வேகமாக வளரக்கூடிய மலைவேம்பு!
ஒரு வருடத்தில் தோப்பாகும்!
மலைவேம்பு குறுகிய காலத்தில் மற்ற மரங்களைவிட அதிக வருமானம் தரக்கூடியது. குறைந்த அளவு நீர்வளம் உள்ள பகுதிகளிலும் நன்றாக வளரும். பராமரிப்பதும் சுலபம். நடவு செய்த 3-ம் ஆண்டில் காகித ஆலைக்கு அனுப்பிவிட முடியும்; 4-ம் ஆண்டு என்றால், தீக்குச்சி தயாரிப்பதற்காகக் கொடுத்துவிட முடியும்; 5, 6-ம் ஆண்டுகள் என்றால்... பிளைவுட் தயாரிக்கும் நிறுவனங்கள் தேடி வரும். 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால், அனைத்து மரச் சாமன்களைச் செய்வதற்கும் பயன்படுத்தலாம். ஆக, தேவையைப் பொறுத்து எந்த நிலையில் வேண்டுமானாலும், இந்த மரத்தை விற்று பணமாக்க முடியும்! நடவு செய்த ஓராண்டுக்குள்ளாகவே தோப்பாக மாறிவிடும் அளவுக்கு இதன் வளர்ச்சி அபரிமிதமானது.
ஏக்கருக்கு 200 மரங்கள்!
சரி, வணிகரீதியாக இதனை சாகுபடி செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம். 
வடிகால் வசதி கொண்ட அனைத்து நிலங்களிலும் வளரும். என்றாலும், மணல் கலந்த வண்டல் மண் பூமியில் சிறப்பாக வளரும். 23 முதல் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 5 முதல் 7 வரையிலான கார அமில நிலை உள்ள மண்ணும் இதற்கு ஏற்றது. நிலத்தை நன்கு உழவு செய்து 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் இரண்டு அடி நீளம், அகலம் மற்றும் ஆழமுள்ள குழிகளை எடுத்து நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்தால், ஏக்கருக்கு 200 கன்றுகள் தேவைப்படும். ஒவ்வொரு குழியிலும் மண்புழு உரம்- ஒரு கிலோ, வேர்வளர்ச்சி உட்பூசணம்-30 கிராம் (வேம்), மட்கிய தொழுவுரம்- ஒரு கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா-தலா 15 கிராம் ஆகியவற்றைப் போட்டு, பையில் உள்ள கன்றுகளை மண் கட்டி உடையாமல் பிரித்து நடவேண்டும். செடிகளின் வேர்ப்பகுதி பூமியின் மேல்பகுதியில் தெரியாதவாறு, மேல்மண்ணைக் கொண்டு குழிகளை மூடவேண்டும். நிலம் முழுக்க இதை நடவு செய்ய முடியாதவர்கள், வரப்பு ஓரங்களில் 10 அடி இடைவெளியில் நடவு செய்யலாம்.

 
மேற்சொன்ன அடிப்படையில்தான் வனவிரிவாக்கத்துறை பரிந்துரை செய்கிறது. ஒரே மாதிரியான அளவில் மரங்கள் கிடைக்க இதைக் கடைபிடிக்கலாம். ஆனால், விவசாயிகள் 10 அடிக்கு 10 அடி இடைவெளியில், ஏக்கருக்கு 400 கன்றுகள் வரையிலும்கூட நடவு செய்கிறார்கள். பெருத்திருக்கும் மரங்களை சீக்கிரமே வெட்டிவிட்டு, மற்ற மரங்களை மேலும் வளரவிட்டு பிற்பாடு வெட்டி விற்பனை செய்கிறார்கள்.
3 வருடம் வரை ஊடுபயிர் செய்யலாம்!
வாரம் ஒரு தண்ணீர் கொடுத்தால் நல்லது. 10 நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் கொடுப்பது அவசியம். முதல் 2 ஆண்டுகளில் மழைக் காலத்துக்கு முன்னதாக கன்றுகளைச் சுற்றி களை எடுத்து, மண்ணைக் கொத்தி விட்டால் வளர்ச்சி அதிகரிக்கும். இந்த மரத்தின் இலைகள் மற்றும் கிளைகளின் அடர்த்தி குறைவாகவே இருக்கும். எனவே, நடவு செய்த முதல் 3 ஆண்டுகள் வரை தண்ணீர் வசதியைப் பொறுத்து மஞ்சள், உளுந்து, வாழை, காய்கறிகள் போன்றவற்றை ஊடுபயிராகச் செய்யலாம். நேராக, உயரமாக வளரக்கூடிய மரம் என்பதால், ஓரளவுக்கு வளர்ந்த மரத்தின் தூர் பகுதியில் இரண்டு மிளகுக் கொடிகளை நடலாம். மிளகு மூலமும் தனி வருமானம் கிடைக்கும்!
60 அடி உயரத்துக்கு மேல் வளரக்கூடிய மரம் இது. மாதம் சராசரியாக ஒரு செ.மீ. முதல் 2 செ.மீ. சுற்றளவுக்கு வளரும். சுமார் 20 அடி உயரம் வரை பக்கக் கிளைகள் வராது என்பதால், இலை, கிளைகளை வெட்டிவிட தேவையில்லை. தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும் (self pruning) தன்மை வாய்ந்ததும்கூட!
ஆண்டுக்கு ஒரு லட்சம்!
ஓராண்டு காலம் வளர்ந்த மலைவேம்புத் தோட்டம், இயற்கையாக அமைந்த பசுமைக்குடிலை போன்று ரம்மியமாகக் காட்சியளிக்கும். 7-ம் ஆண்டு முடிவில் அறுவடை செய்யலாம். ஒரு மரத்தில் இருந்து சுமார் 15 கன அடி தடிமரம் கிடைக்கும். தற்பொழுது கன அடி 250 ரூபாய்க்கு விலை போகிறது. ஒரு மரம் 3,750 ரூபாய்க்கு விலை போகும். சராசரியாக 3,500 ரூபாய் எனக் கணக்கிட்டாலே, 200 மரங்களுக்கு 7 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு ஏக்கரில் இருந்து ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் வருமானம் கிடைக்கும் என்று வைத்துக் கொள்ளலாம். இது தற்போதைய நிலவரம். 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இதன் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த மரம் பிளைவுட் செய்வதற்கு பெரிதும் பயன்படுகிறது. பூச்சி அரிக்காது என்பதால் கட்டடங்களின் உள் அலங்கார வேலைகளுக்கும் உபயோகப் படுத்தப்படுகிறது. மரத்தின் சுற்றளவு அதிகரிக்க அதிகரிக்க பலகை, ஜன்னல் கட்டைகள், நிலைக்கட்டைகள் செய்வதற்கும், மேசை, நாற்காலி, கட்டில்கள் செய்யவும் பயன்படும்.
வணிகரீதியில் மிகப்பெரிய பயனைத் தரக்கூடிய மலைவேம்பை நடவு செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். தரமான மலைவேம்பு நாற்றுகள் குறைந்த விலையில் அனைத்து வனவியல் விரிவாக்க மையங்களிலும் கிடைக்கின்றன.
75 லட்ச எதிர்பார்ப்பு!
 மலைவேம்பை தனிப்பயிராக 5 ஏக்கரில் சாகுபடி செய்து வருகிறார் திண்டுக்கல் மாவட்டம் கோனூர், வெங்கடேசன். அவரிடம் பேசியபோது, ''நான் எம்.சி.ஏ. படிச்சிருக்கேன். படிச்சவங்கள்லாம் விவசாயத்துல பெருசா லாபம் இல்லனு, அதை விட்டுட்டு வேற வேலைக்குப் போறாங்க. ஆனா, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முறையா செஞ்சா, விவசாயத்துலயும் நல்ல வருமானம் பாக்க முடியும். ஏக்கருக்கு 400 செடிகள் (10 அடிக்கு ஜ் 10 அடி) வீதம் 2009-ம் வருஷம் நவம்பர் மாசம் 5 ஏக்கர்ல 2,000 செடிகளை நடவு செஞ்சேன். ஒண்ணேகால் வருஷத்துல ஒவ்வொரு மரமும் 35 செ.மீ. சுற்றளவுல, 20 அடி உயரத்துல வளர்ந்து தோப்பா நிக்குது. இப்போதைக்கு கன அடி 250 ரூபாய்னு சொல்றாங்க. நான் இன்னும் 5 வருஷம் கழிச்சுதான் வெட்டணும். இன்னிக்கு விலைக்கு கணக்குப் போட்டாலே... குறைஞ்சபட்சம் ஒரு மரம் 3,750 ரூபாய் வீதம், 2,000 மரத்துல இருந்து 75 லட்ச ரூபா கிடைச்சுடும்'' என்று மகிழ்ச்சியோடு சொன்னவர்,
''ஊடுபயிரா சோதனை அடிப்படையில வாழையை நட்டுப் பார்த்தேன். நல்லாவே வளர்ந்து வந்துச்சி. அதனால 5 ஏக்கர்லயும் ஊடுபயிரா இலைவாழையை நடவு செய்ய முடிவு செஞ்சிருக்கேன்'' என்று சொன்னார்.
தொடர்புக்கு, வெங்கடேசன், அலைபேசி: 92458-47805  

இந்தியாவே தாயகம்!
மலைவேம்பு, மீலியேசி எனப்படும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். காட்டு வேம்பு, மலபார் வேம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இம்மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது.

Saturday, October 04, 2014

செலவு இல்லை... வரவு உண்டு! : 'சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட்!'

செலவு இல்லை... வரவு உண்டு! : 'சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட்!'


ஆச்சர்யம்  
செலவு இல்லை... வரவு உண்டு!
'சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட்!'
சுபாஷ் பாலேக்கர் எழுதும் தொழில்நுட்பத் தொடர்
ச்சை மணம் பரப்பும் ஜீரோ பட்ஜெட் தோட்டத்தில் சுபாஷ் பாலேக்கர் மற்றும் விவசாயிகள்...
'பசுமை விகடன்' இதழை வாசித்து வரும், நேசித்து வரும் விவசாயச் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
உங்களில் நிறையபேர் என்னிடத்திலும், பசுமை விகடனின் ஆசிரியரிடத்திலும் தொடர்ந்து கேட்டுக் கொண்டதன் விளைவாக 'சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட்' தொடங்கப்பட்டிருக்கிறது. 'ஜீரோ பட்ஜெட்' என்றழைக்கப்படும் செலவில்லா இயற்கை வேளாண்மைத் தொழில்நுட்பங்கள் பற்றி ஏற்கெனவே 'பசுமை விகடன்' வாயிலாக உங்களுக்கு தெரிந்திருக்கும். பசுமைவிகடன் சார்பில் இரண்டு தடவை தமிழகத்துக்கு வந்து நேரடியாகவே ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்திருக்கிறேன். தவிர, தன்னார்வ அமைப்புகளின் ஏற்பாட்டின் பேரிலும் தமிழகம் வந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நேரடி பயிற்சி அளித்திருக்கிறேன். இந்தியா முழுமைக்கும் பார்த்தால்... லட்சோப லட்சம் விவசாயிகளுக்கு இதுவரை ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பங்கள் சென்று சேர்ந்து... இழந்துபோன அவர்களின் வாழ்க்கை வசந்தம் மீண்டும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
அவர்களெல்லாம் சாதிப்பதற்கு உறுதுணையா இருக்கும் ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பத்துக்குள் நுழையும் முன்பாக... அடிப்படையான சில விஷயங்களை அலசிவிடுவதுதான் உங்களுக்கு பல விஷயங்களில் தெளிவு பிறக்க வசதியாக இருக்கும்.
அதாவது, வசந்தம் மீண்டும் கிடைத்திருக்கிறது என்று சொன்னேன் அல்லவா...! அப்படியென்றால் ஏற்கெனவே அவர்களிடம் இருந்த வசந்தத்தைப் பறித்தது யார்..? வேறு யார்... பலரும் பெருமையாகப் பேசி வரும் 'பசுமைப் புரட்சி'தான்!
புரட்சி என்றால் என்ன பொருள்? 'புதிய கருத்தை சிருஷ்டித்தல் அல்லது படைத்தல் என்றுதானே அர்த்தம். ஆனால், இந்தப் புரட்சி சாதித்தது என்ன...?
இந்தியாவில் முன்பு வளமான நிலங்களில் ஒரு ஏக்கரில் 100 டன்கள் வரை கரும்பும், 40 குவிண்டால் வரை கோதுமையும் விளைந்ததாகத் தகவல்கள் உள்ளன. ஆனால், அதே வளமான நிலங்கள் பசுமைப் புரட்சி வித்திட்ட ரசாயனத் திணிப்பு காரணமாக இன்று மலடாகிப்போய், 10 டன் கரும்போ, 5 குவிண்டால் கோதுமையோகூட விளைவிக்க முடியாத நிலங்களாக மாறிக் கிடக்கின்றன. அதேபோல ரசாயன உரத்தின் பாதிப்புகளால், மக்களின் ஆரோக்கியம் சீர்கெட்டுப் போய் பலவித கொடிய நோய்த் தாக்குதலுக்கு மக்கள் உள்ளாகியிருக்கிறார்கள். உழவர்களையும் ஒட்டுமொத்த கிராமத்து மக்களின் பொருளாதாரத்தையும் சுரண்டுவதற்காக உலக அளவிலான மாபெரும் சதித்திட்டம்தான் இது.
தொழிற்சாலைகளில் நடக்கும் உற்பத்திக்கும், நிலங்களில் நடக்கும் உற்பத்திக்கும் வேறுபாடு உள்ளது. தொழிற்சாலையில் உற்பத்தி என்பது மூலப்பொருளின் உருமாற்றம்தான். ஒரு பொருள் இன்னொரு பொருளாகும், அல்லது வடிவம் மாறும். ஆனால், விவசாயத்தில் அப்படிக் கிடையாது. இதில் ஒரு பொருள், பல பொருட்களாகப் பெருகும். இது விவசாயத்தில் மட்டுமே சாத்தியமான விஷயம். ஒரு எள்ளை விதைத்தால் பல மடங்கு எள் அந்தச் செடியில் கிடைக்கும். ஒரு நெல் மணியை விதைத்தால் பலமடங்கு நெல் கிடைக்கும். அதனால்தான் விவசாயத்தில் கை வைத்து சுரண்ட முயன்றார்கள். அதற்குப் பெயர்தான் பசுமைப் புரட்சி. விவசாயிகளை நவீன விவசாயத்துக்குப் பழக்கி இடுபொருட்கள் உள்ளிட்ட அவர்களுக்குத் தேவையான ஒவ்வொரு பொருளையும் நகரத்திலிருந்து வாங்கி வர வைத்து விட்டார்கள். அதாவது, மறைமுகமாக கிராமப் பொருளாதாரத்தை நகரத்துக்கு கடத்துவதுதான் முக்கிய நோக்கம் என்றுகூட சொல்லலாம்.
நூறு வருடங்களுக்கு முன்பு இந்தியாவில், விவசாயிகளின் தேவைகள் அனைத்தும் அவர்களின் கிராமத்திலேயே பூர்த்தியடைந்தன. விதைகள் அனைத்தும் விவசாயிகளிடமே இருந்தன. அவர்களது சொந்தப் பசு மாட்டின் சாணத்தையும், அதன் சிறுநீரையுமே உரமாகப் பயன்படுத்தினார்கள். நாட்டுப் பசுவின் சிறுநீரையும் வேப்ப மர இலைகளையுமே பூச்சி விரட்டியாகப் பயன்படுத்தினார்கள். அதனால் அவர்கள் எந்தப் பயிருக்கும், எந்தவித இடுபொருளையும் வெளியில் வாங்கத் தேவையில்லை. அதனால், கிராமத்து மக்களின் பணம் நகரங்களுக்குச் செல்லவேயில்லை. மாறாக விளைபொருட்கள் மட்டும்தான் நகரத்துக்குச் சென்றன. கிராமத்தை நம்பிதான் நகரங்கள் இருந்தன. கிராம மக்கள் அனைவரும் அந்த காலகட்டத்தில் தற்சார்பு முறையில் பணவசதி படைத்தவர்களாகவும் ஆரோக்கியத்தோடும் இருந்தனர்.
ஒவ்வொரு கிராமமும், தங்களுக்குத் தேவையான பொருட்களை, தனது கிராமத்திலுள்ள சிறு தொழிற்கூடங்களின் மூலமாகவே உற்பத்தி செய்து கொண்டன. கடல் நீரிலிருந்து கிடைத்த உப்பைத் தவிர வேறெந்தப் பொருளும் நகரத்திலிருந்து கிராமத்துக்கு வரவில்லை.
பசுமைப் புரட்சியின் விளைவாக ரசாயன உரம்... ஒட்டு ரக விதைகள்... அவற்றில் வரும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகள்... நோய்க்கான மருந்துகள்.... இப்படி ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து மண்ணைக் கெடுத்தன... இவைகளின் உபயத்தால் கடினமாகிப்போன மண்ணை உழுவதற்காக இயந்திரங்கள் வந்தன... இவற்றை வாங்குவதற்கு பலவித கடன் திட்டங்கள் பிறந்தன... இப்படி ஒன்றன்பின் ஒன்றாகக் கொண்டு வந்து நவீனம் என்ற பெயரில் ஒட்டுமொத்த கிராமத்துப் பொருளாதாரத்தையும் சுரண்டியதன் ஒரே விளைவு, ரசாயன முறையைக் கையாண்ட விவசாயிகளில் பெரும்பாலானோர், கொத்துக்கொத்தாக தற்கொலை செய்து கொண்டதுதான்.
இப்படி விவசாயிகளின் தற்கொலை தொடராமல் இருக்கவும்... பசுமைப் புரட்சி என்ற பெயரில் அவர்களின் வாழ்க்கை அழியாமல் இருக்கவும்... 'ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை (பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி)' முறைகளின் மூலம், விவசாயிகளின் வாழ்வில் வளம் செழிக்க நான் வழி காட்டிக் கொண்டிருக்கிறேன்.
எனது ஜீரோ பட்ஜெட் விவசாயம் முற்றிலும் மாறுபட்டது. இந்த முறைக்கு மாறும் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான எவ்வித இடுபொருளையும் நகரத்திலிருந்து வாங்க வேண்டிய அவசியமே இல்லை. எந்தப் பயிராக இருந்தாலும், உற்பத்திச் செலவே இருக்கக் கூடாது என்பதுதான் இந்த முறையின் அடிப்படைக் கோட்பாடு.
செடிகள் வளர்வதற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் அந்தந்த செடிகளின் வேர்களின் அருகிலேயே இருக்கிறது. அதாவது... நம்முடைய நிலத்திலேயே எல்லாவித ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன. ஒரு செடி, தனது வளர்ச்சிக்குத் தேவையான மூலப் பொருள்களில் 1.5% மட்டும்தான் நிலத்திலிருந்து எடுத்துக் கொள்கிறது. மீதமுள்ள 98.5% காற்று, நீர் மற்றும் ஆகாய மண்டலத்திலிருந்துதான் எடுத்துக் கொள்கிறது.
செடிகள் தனக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்துகொள்ள ஆகாயத்திலிருந்து கரியமில வாயு மற்றும் தழைச்சத்தையும்... நீரை, பூமியிலிருந்தும், ஒளியை சூரியனிடமிருந்தும்தான் பெற்றுக் கொள்கின்றனவே தவிர, நம்மிடம் இருந்து எதையும் பெற்றுக் கொள்வதில்லை, எதிர்பார்ப்பதுமில்லை. ஒரு நாளில் ஒவ்வொரு சதுர அடி இலைப் பரப்பும் 4.5 கிராம் மாவுச் சத்தைத் தயாரிக்கின்றது. இதிலிருந்து நாம் 1.5 கிராம் தானியங்களையோ அல்லது 2.25 கிராம் பழங்களையோ பெறுகிறோம். இவை அனைத்தும் இயற்கையின் துணையால் இலவசமாகவே கிடைக்கப் பெறுவது என்பதுதான் நிதர்சனம்.
-தாக்கல் செய்வோம்

Thursday, September 18, 2014

பசுமையில் படித்தேன்... சொர்ணமசூரி விதைத்தேன் !

பசுமையில் படித்தேன்... சொர்ணமசூரி விதைத்தேன் !
கு.ராமகிருஷ்ணம்
 பளிச்... பளிச்...
பலன் தரும் பாய் நாற்றங்கால்.
ஒரு நாத்துக்கு 30 தூர்.
பூச்சிகளை விரட்டும் பூண்டு, மிளகாய்க் கரைசல்.
''பாரம்பர்ய ரகமான சொர்ணமசூரி நெல் பத்தி 'பசுமை விகடன்'ல படிச்சதுமே ரொம்ப ஆர்வமான நான், உடனடியா விதைநெல்லை வாங்கி சாகுபடி செஞ்சேன். இன்னும் பத்து நாள்ல அறுவடை. பயிர் நல்லா செழிப்பா இருக்குறதால நல்ல மகசூல் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்'' மகிழ்ச்சிப் பொங்க பேசுகிறார் தஞ்சாவூர் மாவட்டம், செம்மங்குடியைச் சேர்ந்த கண்ணன்.  
''50 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்றேன். முழுக்க முழுக்க ரசாயன முறையிலதான் நெல் விவசாயம் செஞ்சுக்கிட்டு இருந்தேன். 'பசுமை விகடன்' படிக்க ஆரம்பிச்ச பிறகு... நம்மாழ்வாரும், சுபாஷ் பாலேக்கரும் சொல்ற இயற்கை இடுபொருட்களைத் தயார் செஞ்சு, பயன்படுத்தத் தொடங்கினேன்.
இந்த நாலு வருசமா 10 ஏக்கர்ல முழுமையா இயற்கை விவசாயமும், மீதி 40 ஏக்கர்ல 90% இயற்கை இடுபொருட்களும் வெறும் 10% ரசாயன உரமும் கலந்து விவசாயம் செய்றேன். ஆனா, ரசாயனப் பூச்சிக்கொல்லிகளை முழுமையா தவிர்த்திட்டேன். அடுத்த வருஷத்துல இருந்து முழுக்கவும் இயற்கை விவசாயம்தான்.
கும்பகோணம் பக்கத்துல இருக்கற மருதாநல்லூரைச் சேர்ந்த எட்வின்கிட்டதான் சொர்ணமசூரி விதைநெல் வாங்கினேன். ரெண்டு கிலோ மட்டும் கிடைச்சதால, 30 சென்ட்ல மட்டும் ஒற்றை நாற்று முறையில சாகுபடி செஞ்சேன். இதோ, பயிரைப் பாருங்க சும்மா தளதளனு வளர்ந்து நிக்கறத...'' என்று உற்சாகத்தோடு சொன்னவர், சொர்ணமசூரியை 30 சென்ட் நிலத்தில் தான் சாகுபடி செய்த முறையை விவரித்தார் பாடமாக!
முளைத்த பின் விதை!
சொர்ணமசூரி ரகத்தை நாற்றங்காலில் விதைப்பதற்கு 12 மணி நேரத்துக்கு முன்பாக தண்ணீரில் ஊற வைத்து எடுத்து, அடுத்த 12 மணி நேரம் வைக்கோலும், சாக்கும் போட்டு மூடி வைக்க வேண்டும். வெப்பமும், ஈரமும் சேர்ந்து விதையைப் பழுக்கச் செய்து, முளைப்பு விடச் செய்துவிடும்.
3 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட பாலித்தீன் விரிப்பை விரித்து, அதில் 4 அங்குலம் உயரத்துக்கு மண்ணையும், இரண்டு கிலோ மட்கிய தொழுவுரத்தையும் கலந்து போட்டு, லேசாகத் தண்ணீர் தெளித்து, பாய் நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். முளைவிட்ட விதைகளை, இந்த நாற்றங்காலில் தூவி விதைக்க வேண்டும். அடுத்த நாளில் இருந்து தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும். 100 கிராம் சாணம், 100 மில்லி மாட்டுச்சிறுநீர், 200 மில்லி தண்ணீர் கலந்து, மண்பானையில மூன்று நாள் மூடி வைத்து, 10-ம் நாளில் நாற்றங்காலில் தெளிக்க வேண்டும்.
100 நாளில் அறுவடை!
19-ம் நாளில் நாற்று தயாராகி விடும். சாகுபடி நிலத்தை மண்வெட்டியால் நன்றாகக் கொத்திவிட்டு, 30 கிலோ மட்கிய தொழுவுரம் போட்டு, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்த நாள் முக்கால் அடி இடைவெளியில நாற்று நட வேண்டும். அதன் பிறகு, காய்ச்சலும் பாய்ச்சலுமாக, நிலத்தில் உள்ள ஈரத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவிலிருந்து 10-ம் நாள்... 1 கிலோ சாணம், 1 லிட்டர் மாட்டுச்சிறுநீர், 5 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.

15-ம் நாள் அரை லிட்டர் பஞ்சகவ்யாவை 5 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். 25-ம் நாள் 50 மில்லி பூண்டு, மிளகாய்க் கரைசலை ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும் (பார்க்க, பெட்டி செய்தி). இதையெல்லாம் சரியாகச் செய்தால், சோர்வே இல்லாமல் வேகமா வளர்வதோடு... பூச்சி மற்றும் நோய் தாக்குதலும் இருக்காது. இதைத் தவிர வேறு எந்த பராமரிப்பும் தேவையில்லை. 100-ம் நாள் அறுவடை செய்யலாம்.
சாகுபடி பாடம் முடித்த கண்ணன், 'இந்தப் பயிருக்கு 90 நாள் வயசு ஆகுது. உயரம் 3 அடி இருக்கு. ஒரு நாத்துக்கு சராசரியா 30 தூர் வெடிச்சிருக்கு. இன்னும் 10 நாள்ல அறுவடை செய்யப் போறேன்.
இந்த 30 சென்ட்ல சராசரியா 6 மூட்டை (60 கிலோ) மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். அடுத்த முறை அதிக பரப்புல இதை சாகுபடி செய்ய முடிவு செஞ்சிருக்கேன். புதுரகத்தையும், புதுப்புது நண்பர்களையும் எனக்கு அடையாளம் காட்டின பசுமை விகடனுக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை'' என்று நெக்குருகிச் சொல்லி விடை கொடுத்தார்!
படங்கள்:கே. குணசீலன்
தொடர்புக்கு, கண்ணன், அலைபேசி: 94432-22257
பூண்டு,மிளகாய்க் கரைசல் தயாரிப்பது எப்படி ?
பூண்டு, பச்சைமிளகாய் இரண்டையும் தலா ஒரு கிலோ எடுத்து, ஒன்றாக அரைத்து, அதில் 1 கிலோ புகையிலை, 5 லிட்டர் தண்ணீர் கலந்து, மண் பானையில் வைத்து, கொதிக்க விடவேண்டும். மூன்று நாள் மூடி வைத்து, பிறகு நன்றாக வடிகட்டி, கசடு நீக்கிய பிறகு, இந்தக் கரைசலைப் பயிருக்குப் பயன்படுத்தலாம்.

Wednesday, September 10, 2014

மாதம் ரூ.3 லட்சம்... பலே வருமானம் தரும் பால் காளான்...!


இயற்கை விளைபொருட்களைத் தேடி ஓடுபவர்களுக்கு... அருமையான வரப்பிரசாதம், காளான். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இயற்கையாகத்தான் விளைவிக்கப்படுகிறது. தவிர, மாமிசத்தைப் போன்ற சுவையும் இருப்பதால், இதற்கான சந்தை வாய்ப்பும் நன்றாகவே உள்ளது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பலரும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் மதுரை மாவட்டம், கருவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்-ஸ்ரீப்ரியா தம்பதியும் அடக்கம்.
'பசுமை பால் காளான் பண்ணை’ என்கிற பெயர் பலகை பளிச்சிட்ட அந்தப் பண்ணைக்குள் நாம் நுழைந்தபோது... ஒருபுறம் வைக்கோல் அவிந்து கொண்டிருந்தது. இன்னொருபுறம் பரபரப்பாக காளான் அறுவடை நடந்து கொண்டிருந்தது. சிரித்த முகத்துடன் வரவேற்றுப் பேச ஆரம்பித்தனர் தம்பதியர்.
வழிகாட்டிய பசுமை விகடன்!
''நாங்க இந்தளவுக்கு வளந்திருக்கிறதுக்கு காரணமே 'பசுமை விகடன்’தான். விவசாயத்துக்கு மாற்றுவழி தேடினப்போ, பசுமை விகடன் மூலமாத்தான் காளான் பத்தித் தெரிஞ்சுக்கிட்டோம். பல விவசாயிகளோட தொடர்பும் அது மூலமாத்தான் கிடைச்சுது. அதனாலதான் எங்கள் பண்ணைக்கு 'பசுமை பால் காளான் பண்ணை’னே பேர் வெச்சுட்டோம். பண்ணைக்கு மட்டுமில்லாம எங்க பேருக்கும் 'பசுமை’ங்கிறதே அடைமொழியாகிடுச்சு'' என ஸ்ரீப்ரியா பூரிக்க... அவரைத் தொடர்ந்தார் ராஜ்குமார்.
''நூத்துக்கணக்கான வகை காளான்கள் இருக்கு. நாம பெரும்பாலும் சாப்பிடறது... 'பட்டன் காளான்’, 'சிப்பிக்காளான்’, 'பால் காளான்’னு மூணு வகைகளைத்தான். பட்டன் காளானை மலைப்பிரதேசங்கள்ல மட்டும்தான் விளைய வைக்கமுடியும். சிப்பிக்காளான், பால் காளான் ரெண்டையும் சாதாரணமா எல்லா இடங்கள்லயும் விளைவிக்கலாம். வெயில் காலங்கள்ல சிப்பிக்காளான் விளைச்சல் குறையும். குளிர் காலங்கள்ல பால் காளான் விளைச்சல் கொஞ்சமா குறையும். ஆனால், சிப்பிக்காளானைவிட, பால் காளானுக்கு அதிக விலை கிடைக்கும். பால் காளானை ஒரு வாரம் வரை வெச்சிருந்தும் விற்பனை செய்யலாம்'' என்று பால் காளானுக்குக் கட்டியம் கூறியவர், உற்பத்தி செய்யும் முறைகள் பற்றிக் கூறினார்.
மூன்று அறைகள் தேவை!
'சிமென்ட் தரை கொண்ட பத்துக்குப் பத்து சதுர அடியில் இரண்டு அறைகளும் பூமிக்கு அடியில் ஓர் அறையும் தேவை. முதல் அறை காளான் 'பெட்’ தயாரிப்பு அறை. இரண்டாம் அறை, காளான் வளரும் அறை. மூன்றாவது அறையான, பூமிக்குள் அமையும் அறையில்தான் காளான் முழு வளர்ச்சி அடையும். முதல் இரண்டு அறைகளை சிமென்ட் கொண்டு கட்டிக் கொள்ளலாம். மூன்றாவது அறையை 4 அடி ஆழம், 33 அடி நீளம், 12 அடி அகலம் இருக்குமாறு அமைத்து சுற்றுச்சுவர்களைக் கட்டி, பாலிதீன் குடில் போல அமைத்து, காற்றை வெளியேற்றும் விசிறி அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த அறையின் அடிப்பகுதியில் ஓரடி உயரத்துக்கு ஆற்று மணலை நிரப்ப வேண்டும்.
சுத்தம் அவசியம்!
முதல் இரண்டு அறைகளும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பாக, பெட் தயாரிப்பு அறை எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி கிருமிநாசினியால் தரையைச் சுத்தம் செய்வதோடு, உள்ளே செல்பவர்களும் சுத்தமாகத்தான் செல்ல வேண்டும். காளான் வளரும் அறை, எப்போதும் 30 டிகிரி முதல் 35 டிகிரி தட்ப வெப்ப நிலையிலும், 80% முதல் 95% ஈரப்பதத்துடனும் இருக்க வேண்டியது அவசியம். அறை வெப்பநிலையைப் பராமரிக்க பிரத்யேக கருவிகள் உள்ளன.
தேவையான அளவு வைக்கோலை அவித்து, தரையில் கொட்டி, 1 மணி நேரம் வரை உலர வைக்கவேண்டும். காளான் பெட்டுக்கான பிரத்யேக பைகளில் ஒருபுறத்தை நூலால் கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு, அவித்து உலர்ந்த வைக்கோலைச் சுருட்டி பைக்குள் வைத்து, அதன் மேல் காளான் விதைகளைத் தூவ வேண்டும் (காளான் விதைகள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன). பிறகு, மீண்டும் வைக்கோலைச் சுருட்டி வைத்து, காளான் விதைகளைத் தூவவேண்டும். இப்படி அடுக்கடுக்காக நிரப்பினால், ஒரு பையில் நான்கு அடுக்கு விதைகள் பிடிக்கும். பிறகு, பையின் மேற்புறத்தை நூலால் கட்டி, பையின் மேல்புறம், கீழ்புறம், பக்கவாட்டுப்புறம் என அனைத்துப் பகுதிகளிலும் காற்றுப்புகுமாறு ஊசியால் துளைகள் இடவேண்டும். இப்படித் தயார் செய்த பெட்களை, இரண்டாவது அறையில் கயிற்றில் தொங்கவிட வேண்டும். இரும்பு அலமாரியிலும் அடுக்கி வைக்கலாம். இப்படி வைக்கப்பட்ட பெட்களில் ஐந்து நாட்கள் கழித்து, வட்டவட்டமாக பூஞ்சணம் உருவாக ஆரம்பிக்கும். அடுத்த பத்து நாட்களுக்குள் அதாவது பெட் அமைத்த பதினைந்தாவது நாளுக்குள் பை முழுவதும் பூஞ்சணம் பரவிவிடும்.
மூன்று முறை அறுவடை!
இந்தச் சமயத்தில் ஒரு கிலோ கரம்பை மண்ணுடன், 20 கிராம் கால்சியம்-கார்பனேட் என்கிற விகிதத்தில் கலந்து, தேவையான மண்ணை எடுத்து ஒரு துணியில் கட்டி, தண்ணீரில் மூழ்குமாறு வைத்து, ஒரு மணி நேரம் வேகவைக்க வேண்டும். பூஞ்சணம் பரவிய காளான் பைகளை சரிபாதியாக கத்தி மூலம் பிரித்து எடுத்து... வைக்கோல் மீது அவித்தக் கரம்பையைத் தூவி, மூன்றாவது அறையில் வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். தினமும் ஒரு முறை ஸ்பிரேயர் மூலம் தண்ணீர் தெளித்து வந்தால், மூன்றாவது அறையில் வைத்த 16-ம் நாள், காளான் முழுவளர்ச்சி அடைந்துவிடும். ஒவ்வொரு பெட்டிலும் முதல் அறுவடையாக 300 கிராம் முதல், 500 கிராம் வரை காளான் கிடைக்கும். அடுத்த பத்தாவது நாள், இரண்டாவது அறுவடையாக, ஒவ்வொரு பெட்டிலும் 200 கிராம் முதல் 350 கிராம் வரை காளான் கிடைக்கும். அடுத்த பத்தாவது நாளில், ஒவ்வொரு பெட்டிலும் 150 கிராம் முதல், 250 கிராம் வரை காளான் கிடைக்கும். மூன்று அறுவடை முடிந்த பிறகு, பைகளை அகற்றிவிட்டு, புதிய பெட்களை வைக்க வேண்டும். ஒரு பெட்டில் குறைந்தபட்சம் 650 கிராம் காளான் கிடைக்கும். சுழற்சி முறையில் செய்து வந்தால், தொடர் வருமானம் பார்க்கலாம். அறுவடை முடிந்த பிறகு கிடைக்கும் வைக்கோலை உரமாகப் பயன்படுத்தலாம்.
காளான் உற்பத்தி பற்றி பாடமாகச் சொன்ன ராஜ்குமார், ''ஒரு மாசத்துக்கு 2 ஆயிரம் கிலோ வரை காளான் உற்பத்தி செய்றோம். ஒரு கிலோ காளான் மொத்த விலையா
150 ரூபாய்னு விற்பனை செய்றோம். விற்பனை மூலமா, 3 லட்ச ரூபாய் கிடைக்கும். மின்சாரம், மூலப்பொருள் எல்லாத்துக்கும் சேத்து 70 ஆயிரம் ரூபாய் செலவுபோக,
2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்குது. நாங்க வேலைக்கு ஆட்களை வெச்சுக்கிறதில்லை. எங்க குடும்பத்துல இருக்குற எல்லாருமே வேலை செஞ்சுக்குறோம். பிள்ளைங்க கூட பள்ளிக்கூடத்துக் குக் கிளம்புறதுக்கு முன்ன பண்ணையில வேலை பாப்பாங்க. அதனால, எங்களுக்கு ஏகப்பட்ட செலவு மிச்சம். இப்போ, மத்தவங் களுக்கு காளான் தயாரிப்புப் பயிற்சியும் கொடுத்துட்டு இருக்கோம்'' என்ற ராஜ்குமார்,
''குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கிற விவசாய உபதொழில்கள்ல பால் காளான் வளர்ப்பும் ஒண்ணு. இதுக்கு எப்பவுமே சந்தை வாய்ப்பு இருக்கிறதால எல்லாருமே தாராளமா இந்தத் தொழிலை ஆரம்பிக்கலாம். ஆரம்பத்துல குறைவா உற்பத்தியைத் தொடங்கி, போகப்போக விற்பனைக்கு ஏத்த மாதிரி அதிகரிச்சுக்கிட்டா நஷ்டமே வராது'' என்று சொல்லி சந்தோஷமாக விடைகொடுத்தார்.
தொடர்புக்கு, ராஜ்குமார்,
செல்போன்: 99524-93556.

Tuesday, September 02, 2014

ஆடு, மாடு கடிக்காத உயிர் வேலி அமைப்பது எப்படி.

பசுமை பொக்கிஷம் :
நீங்கள் கேட்டவை : கேள்வி - பதில்
ஆடு, மாடு கடிக்காத உயிர் வேலி அமைப்பது எப்படி... உயிர் வேலிக்கான கன்றுகள் எங்கு கிடைக்கும்?'' என்று குடவாசலிலிருந்து எம்.கார்த்திக் கேட்டிருக்கிறார். ஈரோடு-முத்தூரைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சி.சுப்பிரமணியன் பதில் தருகிறார்.
‘‘கிளுவை, கிளா, கள்ளி என்று ஒவ்வொரு பகுதிக்கும் தக்கவாறு உயிர்வேலிகள் நிறையவே இருந்தன. ஆனால், பல பகுதிகளில் இதன் பயன் தெரியாமல் கைவிட்டுவிட்டனர். விவரம் தெரியாமல் அழித்துவிட்டு, கடன் வாங்கி கம்பி வேலி போடுபவர்களும் உண்டு.
எங்கள் மாவட்டத்தில் கிளுவை மரச்செடியைத்தான் இப்போதும் கூட பரவலாக பயன்படுத்தி வருகிறோம். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை பகுதியிலும் பரவலாக இதைப் பார்க்க முடியும். சிவகங்கை உள்ளிட்ட சில பகுதிகளில் கள்ளி வேலியை பார்க்கலாம்.
கிளுவையைப் பொறுத்தவரை குறிப்பாக மானாவாரி நிலத்தில் இது அருமையாக வளரும். தண்ணீர் தேங்கி நிற்கக் கூடிய நிலத்தில் வளராது. இதை நடவு செய்வதற்கு ஆடி, ஆவணி மாதங்கள் ஏற்றது. பருவமழைக் காலத்தில் நடவு செய்தால் உடனே வேர் பிடிக்கும். ஆடு, மாடுகள் கடிக்காது (வெள்ளாடு மட்டும் கடிக்கும்). மண் அரிப்பைத் தடுக்கும், நிரந்தர வேலியாகவும் இருக்கும். தூதுவளை, கோவைக்காய், சிறுகோவை போன்றவற்றை இதன் மீது படரவிட்டு, வருமானம் பார்க்கலாம்.
கம்பி வேலி, கல்வேலி என்று செலவு பிடிக்கும் சமாச்சாரங்களைக் காட்டிலும், கிளுவை போன்ற உயிர் வேலிகளே மிகச் சிறந்தவை.
கிளுவைக் குச்சிக்காக பெரிதாக அலையத்தேவையில்லை. அக்கம் பக்கத்தில் கூட விசாரித்தால் யாராவது ஒரு விவசாயி அதைக் கடைபிடித்துக்கொண்டிருப்பார். அவரிடமே கூட விதைக்குச்சிகளைக் கேட்டுப் பெறமுடியும். உங்கள் பகுதியில்தான் இருக்கிறது பட்டுக்கோட்டை. அங்கேயும் முயற்சிக்கலாம். எங்கும் கிடைக்காத பட்சத்தில் என்னைத் தொடர்பு கொள்ளவும்.'' அலைபேசி 98947-55626.

ஓய்வுக்குப் பின்னே ஒரு கொண்டாட்டம்...


மகசூல்
ஜி.பிரபு
 
ஓய்வுக்குப் பின்னே ஒரு கொண்டாட்டம்...
கொட்டிக் கொடுக்குது குடைமிளகாய்!
சமவெளிப் பகுதிகளைவிட மலைப்பகுதிகளில் விவசாயம் பார்ப்பது என்பது கொஞ்சம் சிக்கலான விஷயம்தான். பத்து ஏக்கர், இருபது ஏக்கர் என்று நிலத்தை வைத்திருப்பவர்கள்... கால்கடுக்க, உடம்பு நோக சுற்றி வந்து விவசாயம் செய்தாலும் கடைசியில் கணக்கு பார்க்கும்போது, 'லாபமே இல்லை' என்று சொல்வதைத்தான் அதிகமாகப் பார்க்கமுடியும். அதிலும் விதவிதமான காய்கறிகளைப் பயிர் செய்பவர்களின் பாடு பிரச்னைகள் மிகுந்ததாகவே இருக்கிறது.
ஆனால், ''இனி யாரும் அப்படி வருத்தப்பட வேண்டியதில்லை. கால் ஏக்கர் நிலம் இருந்தாலே போதும், குடைமிளகாய் பயிரிட்டே மாதம் நாற்பதாயிரம் ரூபாய் வரைச் சம்பாதிக் கலாம்'' என்று உற்சாகத்தகவலை வெளியிடுகிறார் திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையைச் சேர்ந்த விவசாயி ராஜாராமன். 
இவர் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் பசுமைக்குடில். இந்த முறையில் சமவெளிப் பகுதிகளில் குடைமிளகாய் சாகுபடி பல இடங்களில் நடக்கிறது. என்றாலும், அதைக் காட்டிலும் மலைப் பிரதேச சாகுபடியில் நல்ல லாபம் ஈட்டமுடியும். அதனாலேயே இதைக் கையில் எடுத்திருக்கிறேன் என்கிறார் ராஜாராமன்.
மதுரையைச் சேர்ந்த இவர், ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆனால், ஓய்ந்துபோய் உட்கார்ந்துவிடாதவர். சொல்லப்போனால், ஓய்வு பெற்றபிறகு அதிக அளவு சுறுசுறுப்பாகி, விவசாயத்தில் குதித்துவிட்டார். கணக்குப் போட்டுப்பார்த்தால்... கோட்-சூட் மாட்டிக் கொண்டு ரயில் நிலையத்தில் நின்றபோது கிடைத்த சம்பளத்தைவிட பல மடங்கு கூடுதலாகச் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்.
''இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா... அந்த வேலைக்கே போயிருக்கவேண்டியதில்லை....'' என்று வயிறு குலுங்கச் சிரித்துக்கொண்டே சொல்லும் ராஜாராமன், இதுவரை சிறுமலைப்பகுதி யில் யாருமே முயற்சி செய்து பார்த்திராத இந்த குடைமிளகாயை (கேப்ஸிகம்) பிரமாத மாக விளைவித்து லாபம் ஈட்டி வருகிறார்.
திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் பாதையில் தனித்திட்டாக உயர்ந்து கிடக்கும் பகுதிதான் சிறுமலை. கொடைக்கானல் அளவுக்கு உயரம் கிடையாது என்றாலும் கொடைக்கானலைக் காட்டி லும் சூழலில் உயர்ந்தே நிற்கிறது சிறுமலை. சுற்றுலாவுக்கான அம்சங்கள் ஏதுமில்லாததால் கிட்டத்தட்ட ஒரு காட்டுப்பகுதியாகவே கிடக்கிறது சிறுமலை. இந்தப் பகுதியை பாதுகாத்துவரும் தமிழக வனத்துறை, கண்கொத்தி பாம்பாக சுற்றிவருவதால், சிறுமலையின் சூழல் கொஞ்சம் கூட கெடவில்லை. இதன் காரணமாகவே இந்தப் பகுதியில் கொய்மலர்கள் உள்ளிட்ட பல வகையான சாகுபடி சக்கைப் போடு போடுகிறது.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி ‘ஊட்டி ரோஸ்’ என்பதை முதன் முதலாக இங்கே பயிரிட்டு வெற்றி கண்டவர்தான் இந்த ராஜாராமன். அடுத்த கட்டமாகத்தான் குடை மிளகாயை கையில் எடுத்திருக் கிறார். ஊட்டி ரோஸ் மற்றும் குடைமிளகாய் இரண்டிலும் இவர் பெற்றிருக்கும் வெற்றி, சிறுமலை உள்ளிட்ட திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் வேகமாகப் பரவி, தற்போது பலரும் குடை மிளகாய்க்காக பசுமைக்குடில் அமைத்து வருகின்றனர்.
ராஜாராமன் சொல்வதைக் கேட்போமா... ''எனக்கு சின்ன வயசில் இருந்தே தோட்டக் கலையில ஆர்வம் அதிகம். மதுரையில இருக்கற பாண்டியன் ஓட்டல்ல வருஷாவருஷம் நடக்குற வீட்டுத்தோட்டப் போட்டியில கலந்துகிட்டு நிறைய பரிசுகள் வாங்கியி ருக்கேன். சிறுமலைக்கு ஒரு தடவை சுற்றுலா வந்தப்போ இந்த சூழ்நிலை எனக்குப் பிடிச்சுப் போச்சி. அதனால இங்க நிலத்தை வாங்கி தோட்டம் அமைக்க முடிவு செய்து, உடனடியா அதை நிறைவேத்திட்டேன்.
கொய்மலர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்குறது தெரிஞ்சு, சோதனை அடிப்படையில் 560 சதுர மீட்டர்ல மட்டும் ஊட்டி ரோஸ் பயிர் செய்தேன். அதுல எனக்கு நல்ல வெற்றி கிடைச்சதால, இன்னொரு யூனிட் போடறதுக்குண்டான முயற்சிகள்ல இறங்கினேன். அப்ப சில நண்பர்கள், தோட்டக்கலை ஆலோசகர்கள் மூலமா குடை மிளகாய் பத்தி தெரிஞ்சுகிட்டேன். அதுக்கான மார்கெட் நிலவரத்தை விசாரிச்சப்ப, நல்ல தேவை இருக் கறது தெரிஞ்சுது. ரோஜாவுக்காக அமைச்ச பசுமைக்குடில்லயே குடை மிளகாயை பயிர் பண்ணிட்டேன்.
ரோஜா மாதிரியே இந்த குடை மிளகாய்க்கும் ஓரளவுக்கு வெப்ப நிலை இருந்தா போதும். 26 டிகிரியில் இருந்து 36 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையும், காற்றோட ஈரப்பதம் 60% முதல் 85% வரைக்கும் இருந்தாபோதும். நல்ல செம்மண் நிலமா இருக்கணும்.
சிவப்பு, மஞ்சள், வயலட், பச்சை கலர்ல குடைமிள காய்கள் இங்க பயிராகுது. ஒன்பது மாசத்துல இதோட காலம் முடிஞ்சிடும். திரும்பவும் நடவு செய்து வளர்க்கலாம். குளிர்காலத்துல மட்டும் சரியான படி காய்ப்பு இருக்காது. அதுக்கு ஏத்த மாதிரி ஜனவரியில் நடவு செய்ய ஆரம்பிக்கலாம். நடவு செஞ்ச தொண்ணூறாவது நாளிலிருந்து பலன் கிடைக்க ஆரம்பிச்சுடும். நாட்டுல இருக்கற ஃபைவ்ஸ்டார் ஓட்டல்ங்க அத்தனையிலயும் இந்த குடைமிளகாய்களுக்கு நல்ல தேவை இருக்கறதால மார்க்கெட் பண்றது சுலபமாயிடுச்சு. இங்க உற்பத்தி யாகற குடைமிளகாய் அத்தனையும் சென்னையில இருக்கற கோயம்பேடு மார்க்கெட்டுக்குதான் போகுது. என் பையன் சென்னையில் இருக்கறது எனக்குக் கூடுதல் வசதி. திண்டுக்கல்ல இருந்து பஸ்ஸுல போட்டு அனுப்பிடுவேன். அதை கோயம்பேடு மார்கெட்டுல சேர்த்து எம்பையன் பணமாக்கிடுவான். அதிக தேவை இருக்கறதால பெரும்பாலும் உடனடி யாவே பணத்தைக் கொடுத்துடறாங்க. என் தோட்டத்துக் காய் தரமா இருக்கறதால கிலோவுக்கு ஐம்பத்தேழு ரூபாய் வரை கொடுக்கறாங்க. இதுக்கு மேலும் தொகையை உயர்த்தித் தர வியாபாரிங்க தயாராவே இருக்கிறாங்க. அதுக்கு தகுந்த மாதிரி உற்பத்தியை கூட்டறதுக்கான வேலைகளை செய்துகிட்டிருக்கேன்.
சாதாரணமா ஒரு கிலோவுக்கு முப்பது ரூபாயி லிருந்து அறுபத்தைந்து ரூபாய் வரைக்கும் நமக்கு கிடைக்கும். நேரடியா ஓட்டல்களுக்கே சப்ளை செஞ்சா அதிக லாபம் பார்க்கலாம். வெளிநாடுகள் லயும் தேவை அதிகமா இருக்கறதால, நிறைய உற்பத்தி செஞ்சா ஏற்றுமதி கூட செய்யலாம்” என்று மூச்சுவிடாமல் பேசிய ராஜாராமன், லாப விஷயங்கள் பற்றிய பட்டியலை எடுத்துப்போட்டார்.
ஆயிரம் சதுர மீட்டரில் ஆறாயிரம் செடிகள் வைக்கலாம். ஒன்பது மாதத்தில் ஒரு செடியிலிருந்து ஐந்து கிலோ காய்கள் கிடைக்கும். மொத்தமாக ஒன்பது மாதத்தில் 30 டன் காய்கள் கிடைக்கும். ஒரு கிலோ சராசரியாக நாற்பது ரூபாய் என்றால்கூட, ஒன்பது மாதத்தில் 12 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். பார், நாற்று, உரம், தண்ணீர், வேலையாள் சம்பளம், பேக்கிங் உள்ளிட்ட உற்பத்திச் செலவு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய். அதைக் கழித்துவிட்டால் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும். ஆயிரம் சதுர மீட்டர் பசுமைக்குடிலுக்கு தனியாக ஆறு லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். இதை ஏழு ஆண்டுகள் பயன்படுத்தலாம்.
1,000 சதுர மீட்டர் செம்மண் நிலம் அல்லது செம்மண் பரப்பிய நிலத்தை நன்றாக உழுது பசுமைக்குடில் அமைக்கவேண்டும். தட்ப வெப்பநிலையைப் பொறுத்து பசுமைக் குடிலின் அமைப்புகள் மாறுபடும். சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களை நீக்கி, வெளிச்சத்தை மட்டும் செடிகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். இதைத் தான் பசுமைக்குடில்கள் செய்கின்றன. வெப்பநிலையையும் சீராக வைத்திருக்க அவை உதவுகின்றன.
30 ஆயிரம் கிலோ சாணி, மக்கிய தொழு உரம், நெல் போன்ற தானியங்களின் உமி 1,000 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 500 கிலோ, பாரிடான் 20 கிலோ இதையெல்லாம் போட்டால் விதைப்பதற்கு நிலம் தயாராகி விடும். ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பார் (பெட்) தயார் செய்து ஒவ்வொரு பாரிலும் இரண்டு வரிசையில் நாற்றுகளை நட வேண்டும். குறுக்கு வாட்டில் 60 செ.மீ., பக்க வாட்டில் 15 செ.மீ. இருக்குமாறு வரிசையில் நடவேண்டும். ஒரு செடிக்கு ஒரு நாளைக்கு நான்கு லிட்டர் தண்ணீர் சொட்டு நீர்பாசன முறையில் விடவேண்டும். மற்றபடி பூச்சிகள் தாக்காமல் இருக்க, மருந்துகளை ஸ்பிரே செய்யலாம். வேறு எந்தப் பூச்சிகளும் குடிலுக்குள் நுழைந்து விடாமலிருக்க வலை களைக் கட்டி பாதுகாப்புச் செய்யலாம்.
செடி வைத்து தண்டு வளரும்போது, கவட்டை வடிவத்தில் இரண்டு தண்டுகளை மட்டுமே வளரவிட்டு மற்ற தண்டுகளை ஒடித்துவிடவேண்டும். அந்த இரண்டு முனைகளிலிருந்தும் அடுத்து தண்டுகள் வளரும்போது, முன்போலவே இரண்டு தண்டுகளை மட்டுமே வளர விடவேண்டும். அடுத்தடுத்து இப்படியே தண்டுகளை பராமரிப்பதன் மூலம் செடியில் காய்கள் நன்கு காய்க்கும். செடி வைத்த ஒரு மாதத்தில் தண்டுகளின் முனைகளில் கயிற்றைக் கட்டி மேன் பக்கமாக இழுத்துக் கட்ட வேண்டும். அப்போதுதான் காயின் பாரத்தை செடி தாங்கும்.
ஒவ்வொரு காயும் பெரிதாகும் அளவுக்கு இடைவெளி விட்டுப் பக்கத்தில் இருக்கின்ற பிஞ்சுகள், மொட்டுகள், இலைகள் எல்லாவற் றையும் கழித்துவிடலாம். காய் நல்ல வடிவத்தில் கிடைப்பதற்கு இது உதவும். தினமும் தவறாமல் இந்த வேலையைச் செய்து வந்தால், ஒரு காய் 300 கிராம் முதல் 500 கிராம் வரை எடை இருக்கும். ஒன்பது மாதம் முடிந்ததும் செடிகளை அழித்துவிட்டு நிலத்தைத் திரும்பவும் சரிசெய்து நாற்றுகளை நடலாம்.
மிகவிவரமாக தன்னுடைய தொழில்நுட் பங்களைப் பட்டியலிட்ட ராஜாராமன், ''என்னைப் பார்த்துட்டு சிறுமலையில் பத்துக்கும் மேற்பட் டவங்க பசுமைக் குடில் அமைச்சி குடைமிளகாய் பயிரிடுற முயற்சியில இறங்கியிருக் காங்க. என்னால முடிஞ்சவரைக்கும் தொழில்நுட்பங் களை பலருக்கும் சொல்லிக்கிட்டிருக்கேன். யார் கேட்டாலும் சொல்றதுக்கு தயாராவே இருக்கேன்'' என்று எல்லோருக்கும் அழைப்பு வைத்தார் (தொடர்புக்கு: 04512558358, 92442-14273).

Thursday, August 28, 2014

பச்சை தங்கம் அல்லது பணம் காய்க்கும் மரம்!

பச்சை தங்கம் அல்லது பணம் காய்க்கும் மரம்!
 
அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம், காமதேனு, வாரி வழங்கும் வள்ளல், பச்சை தங்கம்''
-இப்படி, அரசியல் தலைவரை புகழ்வது போல மூங்கிலைப் பற்றி புகழ்ந்து தள்ளுகிறார் அம்மாபேட் டையைச் சேர்ந்த பாலசுப்ரமணியன். வாண்டையார்இருப்பு கிராமத்தின் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் வேளாண் கல்வி ஆசிரியராக இருக்கும் இவரிடம் மூங்கிலைப் பற்றி ஆரம்பித்தால் மணிக்கணக்கில் பேசிக்கொண்டே போகிறார்.
''மூங்கில் அளவுக்கு லாபம் தரக்கூடிய தாவரம் வேறு எதுவும் இல்லை. தாவர இனங்களிலேயே மிக வேகமாக வளரக்கூடிய ஒரே தாவரமும் மூங்கில்தான். ஒரே நாளில் ஒன்று முதல் நான்கு அடி உயரம் வளரக்கூடியது'' என்றெல்லாம் அற்புதத் தகவல்களைச் சொல்லும் இவர், நான்கு ஏக்கரில் தோட்டம் அமைத்து மிகப்பெரிய அளவில் மூங்கில் வளர்ப்பு செய்கிறார். வெண்ணாற்றுப் படுகையின் மேற்கில் உள்ள கோட்டூர் காந்தாவனம் என்ற கிராமத்தில்தான் இவரது மூங்கில் தோட்டம் இருக்கிறது. உள்ளே சென்றதும் 'மூங்கில்தானா?' என திகைத்துப் போனோம். அந்த மூங்கில் கன்றுகளில் ஒன்றில் கூட முள் இல்லை.
‘‘உலகத்துல 111 வகையான பேரின மூங்கிலும், 1,575 வகையான சிற்றின மூங்கிலும் இருக்கு. இதுல ரெண்டே ரெண்டுல மட்டுந்தான் முள் இருக்கும். அதைத்தான் கல் மூங்கி, தொப்பை மூங்கினு நாம சொல் றோம். இந்த ரெண்டு மட்டுந்தான் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்’’ என்று நம் ஆச்சர்யத்துக்கு பதில் தந்தவர்,
‘‘பதினாறு வருஷத்துக்கு முன்னாடி, இந்தத் தோட்டத்துல, சாதாரண மூங்கில் கன்னுதான் வாங்கி நட்டு வச்சேன். ஆனா, வெட்றதுக்கு ஆள் கிடைக்கல. அந்தளவுக்கு இந்தத் தோட்டம் முழுக்க, மூங்கிலே தெரியாத அளவுக்கு முள்ளா மண்டிருச்சி. ஒவ்வொரு வருஷமும் ஆள் தேடியே அலுத்து போச்சு. மனசு வெறுத்துப்போயிட்டேன். எல்லாத்தையும் புல்டோசர் வெச்சி அழிச்சிட்டேன்.
இந்தச் சூழல்ல வனத்துறை சார்பா அம்மாபேட்டையில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்துது. அங்கதான் முள் இல்லா மூங்கிலை பத்தி நிறைய தெரிஞ்சிகிட்டு அதை பயிரிட ஆரம்பிச்சேன்.
பாலசுப்ரமணியன்
முள் இல்லா மூங்கில்ல அளவிட முடியாத அளவுக்கு பலன் இருக்கு. நல்லா உறுதியா இருக்குறதால, கட்டுமான பணிக்கு ரொம்பவே உதவியா இருக்கும். ஆயிரத்துக்கும் அதிகமான, விதவிதமான கைவினை பொருள்கள் செய்யலாம். அழகழகான நாற்காலி, பொம்மை, கூடை, பாய், பலவிதமான இசைக் கருவிகள், மின் விளக்குகள்ல பொருத்துற மாதிரியான, கலைநயம் மிக்க குடுவை இப்படி ஏகப்பட்டது சொல்லிக்கிட்டே போகலாம். இதைவிட ஆச்சர்யம், இது மூலமா துணியே தயாரிக்குறாங்க. பருத்தித் துணியைவிட இது வியர்வையை நல்லா உறிஞ்சும். அதனால இதுக்கு அமோக வரவேற்பு இருக்கு'' என பயன்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போனவர், ஒரு ஆல்பத்தை காட்டிய போது நாம் அசந்து போனோம். சினிமாவில் வருவது போன்ற அழகழகான மர வீடுகள், ஃபோட் டோவில் பளிச்சிடுகின்றன. அவை அனைத்துமே முள் இல்லா மூங்கிலில் தயாரிக்கப்பட்டவை.
கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இம்மாதிரியான முள் இல்லா மூங்கில் மரத்தைக் கொண்டு முழுவீட்டையும் கட்டி முடித்திருக் கிறார்கள். தரை, சுவர் என அனைத்துமே மூங்கில் கொண்டு அமைத்து விடுகிறார்கள். இதில் இருந்து வீட்டு உபயோக பொருட்களும் தயாரிக்கலாம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு இது மாற்று என்பதால் சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கிறது.
அவர் காட்டிய மற்றொரு ஆல்பம் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்தது. கேரளாவில், முள் இல்லா மூங்கிலின் குருத்தை உணவுக்குப் பயன்படுத்து கிறார்கள். சத்தும், சுவையும் நிறைந்த குருத்துணவுக்கு அங்கு ஏகப்பட்ட வரவேற்பு. இதன் சமையல் செய்முறைதான் புகைப் படங்களாக அந்த ஆல்பத்தை அலங்கரித்துக்கொண்டிருந்தன.
‘‘முள் இல்லா மூங்கில்ல, மொத்தம் பதினைஞ்சு ரகம் இருக்கு. அதுல நாலு ரகம் நம்ம தோட்டத்துலேயே இருக்கு. பேம்புசாவல் காரியஸ்தான்ங்கற ரகத்தை இங்க அதிகமா வெச்சிருக்கேன். பேம்புசா நியூட்டன், டூல்ட்டா, பல்கூவா வகைகளும் ஓரளவுக்கு கணிசமா இங்க இருக்கு’’ பேசிக்கொண்டே மூங்கில் தோட்டத்தின் உள்ளே அழைத்துச் சென்றார். சிறிது தூரம் நடந்தபோது பேச்சு சுவாரஸ்யத்தையும் மீறி வித்தியாசமான உணர்வு.... மெத்தையில் நடப்பது போல் இருந்தது. கீழே தரை தெரியாத அளவுக்கு சருகுகள்.
''இதோட சருகுதான் இதுக்கு உணவு. முள்ளில்லா மூங்கில் தனக்குத்தானே உணவு கொடுத்துக்கும். தன்னோட இலை தழைய மட்டுமே சாப்பிட்டு இவ்வளவு பெரிய பலசாலியா வளர்ந்திருக்கு பாருங்க. இதுக்குப் பெரிசா செலவே இல்லை. பராமரிப்பும் செய்ய வேண்டியதில்லை. ஒரு தடவை ஒரு கன்னு வெச்சுட்டா, அஞ்சு வருஷத்துக்குப் பிறகு பலன்தான். தொடர்ந்து 150 வருஷம் வரைக்கும் வெட்டிக்கிட்டே இருக்கலாம். அதுமட்டுமில்லாம, ஒரு குருத்துல இருந்து வருஷத்துக்கு ரெண்டு குருத்து உருவாகும். அதுல இருந்து ரெண்டு ரெண்டா அப்படியே பெருகிகிட்டே இருக்கும்'' என ஆர்வம் பொங்க பேசிக்கொண்டே போனவர், மகசூல் விஷயத்துக்குள் வந்தார்.
''ஒரு ஏக்கர்ல முள் இல்லா மூங்கில் போட்டா, வருஷத்துக்கு பன்னிரண்டு டன் சருகு உதிர்க்கும். இதுல இருந்து அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள மண்புழு உரம் தயாரிக்கலாம். குருத்து மூலமாவும், அறுபதாயிரம் கிடைக்கும். ஒரு மரம் அம்பது ரூபா வரைக்கும் விலை போகும். அப்படினா, ஒரு ஏக்கர்ல வருஷத்துக்கு இரண்டாயிரம் மரம் அறுத்தா அது மூலமாக மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும்'' என்று கணக்குப்போட்டுச் சொல்லும் இவர், பிரபல தொழில் அதிபர்களுக்கு முள் இல்லா மூங்கில் தோட்டம் அமைத்து கொடுத்திருக்கிறார். மத்திய அமைச்சர் ராசாவிடம் இருந்து மூங்கில் வளர்ப்புக்கான நற்சான்றிதழ் வாங்கியிருக்கிறார். இவரைத் தொடர்புகொள்ள அலைபேசி: 94864-08384
பாலசுப்ரமணியன் சொல்லும் வளர்ப்பு முறை...
பனிப் பிரதேசம் மற்றும் பாலைவனப் பகுதிகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலுமே முள் இல்லா மூங்கில் நன்கு வளரும். குறிப்பாக டெல்டா பகுதிகளில் மிகவும் சிறப்பாக செழித்து வளரும். ஒரு ஏக்கரில் அதிகபட்சம் 150 கன்றுகள் நடலாம். குறைந்தபட்சம் 110 கன்றுகள் நடலாம்.
ஆறு மீட்டர் இடைவெளியில் குழிகள் போட வேண்டும். ஒவ்வொரு குழியும் ஒரு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம், ஒரு மீட்டர் ஆழம் இருக்க வேண்டும். அந்தக் குழியில் மண்புழு உரம், தொழு எரு, வேர் பூசணம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பஞ்சகவ்யா, சாம்பல், தென்னை நார் கழிவு ஆகியவற்றை கலந்து குழியினை நிரப்ப வேண்டும்.
குழிகளைச் சுற்றி சிறிய வரப்பு அமைத்து நீர் பாய்ச்ச வேண்டும். மூன்றாம் நாள் மாலை குழியின் நடுவில் கன்று நட வேண்டும். கன்றை சுற்றிலும் கையால் அழுத்தி விட வேண்டும். அதிலிருந்து வாரம் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இரண்டாம் வருடம் வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். மூன்றாம் வருடம், மாதத்துக்கு இரண்டு முறை போதுமானது. அடுத்தடுத்த வருடங்களில் முறையாக தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. தண்ணீர் பாய்ச்சும் வசதி இருந்தால் இன்னும் செழிப்பாக வளரும்.