Tuesday, September 02, 2014

ஓய்வுக்குப் பின்னே ஒரு கொண்டாட்டம்...


மகசூல்
ஜி.பிரபு
 
ஓய்வுக்குப் பின்னே ஒரு கொண்டாட்டம்...
கொட்டிக் கொடுக்குது குடைமிளகாய்!
சமவெளிப் பகுதிகளைவிட மலைப்பகுதிகளில் விவசாயம் பார்ப்பது என்பது கொஞ்சம் சிக்கலான விஷயம்தான். பத்து ஏக்கர், இருபது ஏக்கர் என்று நிலத்தை வைத்திருப்பவர்கள்... கால்கடுக்க, உடம்பு நோக சுற்றி வந்து விவசாயம் செய்தாலும் கடைசியில் கணக்கு பார்க்கும்போது, 'லாபமே இல்லை' என்று சொல்வதைத்தான் அதிகமாகப் பார்க்கமுடியும். அதிலும் விதவிதமான காய்கறிகளைப் பயிர் செய்பவர்களின் பாடு பிரச்னைகள் மிகுந்ததாகவே இருக்கிறது.
ஆனால், ''இனி யாரும் அப்படி வருத்தப்பட வேண்டியதில்லை. கால் ஏக்கர் நிலம் இருந்தாலே போதும், குடைமிளகாய் பயிரிட்டே மாதம் நாற்பதாயிரம் ரூபாய் வரைச் சம்பாதிக் கலாம்'' என்று உற்சாகத்தகவலை வெளியிடுகிறார் திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையைச் சேர்ந்த விவசாயி ராஜாராமன். 
இவர் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் பசுமைக்குடில். இந்த முறையில் சமவெளிப் பகுதிகளில் குடைமிளகாய் சாகுபடி பல இடங்களில் நடக்கிறது. என்றாலும், அதைக் காட்டிலும் மலைப் பிரதேச சாகுபடியில் நல்ல லாபம் ஈட்டமுடியும். அதனாலேயே இதைக் கையில் எடுத்திருக்கிறேன் என்கிறார் ராஜாராமன்.
மதுரையைச் சேர்ந்த இவர், ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆனால், ஓய்ந்துபோய் உட்கார்ந்துவிடாதவர். சொல்லப்போனால், ஓய்வு பெற்றபிறகு அதிக அளவு சுறுசுறுப்பாகி, விவசாயத்தில் குதித்துவிட்டார். கணக்குப் போட்டுப்பார்த்தால்... கோட்-சூட் மாட்டிக் கொண்டு ரயில் நிலையத்தில் நின்றபோது கிடைத்த சம்பளத்தைவிட பல மடங்கு கூடுதலாகச் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்.
''இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா... அந்த வேலைக்கே போயிருக்கவேண்டியதில்லை....'' என்று வயிறு குலுங்கச் சிரித்துக்கொண்டே சொல்லும் ராஜாராமன், இதுவரை சிறுமலைப்பகுதி யில் யாருமே முயற்சி செய்து பார்த்திராத இந்த குடைமிளகாயை (கேப்ஸிகம்) பிரமாத மாக விளைவித்து லாபம் ஈட்டி வருகிறார்.
திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் பாதையில் தனித்திட்டாக உயர்ந்து கிடக்கும் பகுதிதான் சிறுமலை. கொடைக்கானல் அளவுக்கு உயரம் கிடையாது என்றாலும் கொடைக்கானலைக் காட்டி லும் சூழலில் உயர்ந்தே நிற்கிறது சிறுமலை. சுற்றுலாவுக்கான அம்சங்கள் ஏதுமில்லாததால் கிட்டத்தட்ட ஒரு காட்டுப்பகுதியாகவே கிடக்கிறது சிறுமலை. இந்தப் பகுதியை பாதுகாத்துவரும் தமிழக வனத்துறை, கண்கொத்தி பாம்பாக சுற்றிவருவதால், சிறுமலையின் சூழல் கொஞ்சம் கூட கெடவில்லை. இதன் காரணமாகவே இந்தப் பகுதியில் கொய்மலர்கள் உள்ளிட்ட பல வகையான சாகுபடி சக்கைப் போடு போடுகிறது.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி ‘ஊட்டி ரோஸ்’ என்பதை முதன் முதலாக இங்கே பயிரிட்டு வெற்றி கண்டவர்தான் இந்த ராஜாராமன். அடுத்த கட்டமாகத்தான் குடை மிளகாயை கையில் எடுத்திருக் கிறார். ஊட்டி ரோஸ் மற்றும் குடைமிளகாய் இரண்டிலும் இவர் பெற்றிருக்கும் வெற்றி, சிறுமலை உள்ளிட்ட திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் வேகமாகப் பரவி, தற்போது பலரும் குடை மிளகாய்க்காக பசுமைக்குடில் அமைத்து வருகின்றனர்.
ராஜாராமன் சொல்வதைக் கேட்போமா... ''எனக்கு சின்ன வயசில் இருந்தே தோட்டக் கலையில ஆர்வம் அதிகம். மதுரையில இருக்கற பாண்டியன் ஓட்டல்ல வருஷாவருஷம் நடக்குற வீட்டுத்தோட்டப் போட்டியில கலந்துகிட்டு நிறைய பரிசுகள் வாங்கியி ருக்கேன். சிறுமலைக்கு ஒரு தடவை சுற்றுலா வந்தப்போ இந்த சூழ்நிலை எனக்குப் பிடிச்சுப் போச்சி. அதனால இங்க நிலத்தை வாங்கி தோட்டம் அமைக்க முடிவு செய்து, உடனடியா அதை நிறைவேத்திட்டேன்.
கொய்மலர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்குறது தெரிஞ்சு, சோதனை அடிப்படையில் 560 சதுர மீட்டர்ல மட்டும் ஊட்டி ரோஸ் பயிர் செய்தேன். அதுல எனக்கு நல்ல வெற்றி கிடைச்சதால, இன்னொரு யூனிட் போடறதுக்குண்டான முயற்சிகள்ல இறங்கினேன். அப்ப சில நண்பர்கள், தோட்டக்கலை ஆலோசகர்கள் மூலமா குடை மிளகாய் பத்தி தெரிஞ்சுகிட்டேன். அதுக்கான மார்கெட் நிலவரத்தை விசாரிச்சப்ப, நல்ல தேவை இருக் கறது தெரிஞ்சுது. ரோஜாவுக்காக அமைச்ச பசுமைக்குடில்லயே குடை மிளகாயை பயிர் பண்ணிட்டேன்.
ரோஜா மாதிரியே இந்த குடை மிளகாய்க்கும் ஓரளவுக்கு வெப்ப நிலை இருந்தா போதும். 26 டிகிரியில் இருந்து 36 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையும், காற்றோட ஈரப்பதம் 60% முதல் 85% வரைக்கும் இருந்தாபோதும். நல்ல செம்மண் நிலமா இருக்கணும்.
சிவப்பு, மஞ்சள், வயலட், பச்சை கலர்ல குடைமிள காய்கள் இங்க பயிராகுது. ஒன்பது மாசத்துல இதோட காலம் முடிஞ்சிடும். திரும்பவும் நடவு செய்து வளர்க்கலாம். குளிர்காலத்துல மட்டும் சரியான படி காய்ப்பு இருக்காது. அதுக்கு ஏத்த மாதிரி ஜனவரியில் நடவு செய்ய ஆரம்பிக்கலாம். நடவு செஞ்ச தொண்ணூறாவது நாளிலிருந்து பலன் கிடைக்க ஆரம்பிச்சுடும். நாட்டுல இருக்கற ஃபைவ்ஸ்டார் ஓட்டல்ங்க அத்தனையிலயும் இந்த குடைமிளகாய்களுக்கு நல்ல தேவை இருக்கறதால மார்க்கெட் பண்றது சுலபமாயிடுச்சு. இங்க உற்பத்தி யாகற குடைமிளகாய் அத்தனையும் சென்னையில இருக்கற கோயம்பேடு மார்க்கெட்டுக்குதான் போகுது. என் பையன் சென்னையில் இருக்கறது எனக்குக் கூடுதல் வசதி. திண்டுக்கல்ல இருந்து பஸ்ஸுல போட்டு அனுப்பிடுவேன். அதை கோயம்பேடு மார்கெட்டுல சேர்த்து எம்பையன் பணமாக்கிடுவான். அதிக தேவை இருக்கறதால பெரும்பாலும் உடனடி யாவே பணத்தைக் கொடுத்துடறாங்க. என் தோட்டத்துக் காய் தரமா இருக்கறதால கிலோவுக்கு ஐம்பத்தேழு ரூபாய் வரை கொடுக்கறாங்க. இதுக்கு மேலும் தொகையை உயர்த்தித் தர வியாபாரிங்க தயாராவே இருக்கிறாங்க. அதுக்கு தகுந்த மாதிரி உற்பத்தியை கூட்டறதுக்கான வேலைகளை செய்துகிட்டிருக்கேன்.
சாதாரணமா ஒரு கிலோவுக்கு முப்பது ரூபாயி லிருந்து அறுபத்தைந்து ரூபாய் வரைக்கும் நமக்கு கிடைக்கும். நேரடியா ஓட்டல்களுக்கே சப்ளை செஞ்சா அதிக லாபம் பார்க்கலாம். வெளிநாடுகள் லயும் தேவை அதிகமா இருக்கறதால, நிறைய உற்பத்தி செஞ்சா ஏற்றுமதி கூட செய்யலாம்” என்று மூச்சுவிடாமல் பேசிய ராஜாராமன், லாப விஷயங்கள் பற்றிய பட்டியலை எடுத்துப்போட்டார்.
ஆயிரம் சதுர மீட்டரில் ஆறாயிரம் செடிகள் வைக்கலாம். ஒன்பது மாதத்தில் ஒரு செடியிலிருந்து ஐந்து கிலோ காய்கள் கிடைக்கும். மொத்தமாக ஒன்பது மாதத்தில் 30 டன் காய்கள் கிடைக்கும். ஒரு கிலோ சராசரியாக நாற்பது ரூபாய் என்றால்கூட, ஒன்பது மாதத்தில் 12 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். பார், நாற்று, உரம், தண்ணீர், வேலையாள் சம்பளம், பேக்கிங் உள்ளிட்ட உற்பத்திச் செலவு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய். அதைக் கழித்துவிட்டால் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும். ஆயிரம் சதுர மீட்டர் பசுமைக்குடிலுக்கு தனியாக ஆறு லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். இதை ஏழு ஆண்டுகள் பயன்படுத்தலாம்.
1,000 சதுர மீட்டர் செம்மண் நிலம் அல்லது செம்மண் பரப்பிய நிலத்தை நன்றாக உழுது பசுமைக்குடில் அமைக்கவேண்டும். தட்ப வெப்பநிலையைப் பொறுத்து பசுமைக் குடிலின் அமைப்புகள் மாறுபடும். சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களை நீக்கி, வெளிச்சத்தை மட்டும் செடிகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். இதைத் தான் பசுமைக்குடில்கள் செய்கின்றன. வெப்பநிலையையும் சீராக வைத்திருக்க அவை உதவுகின்றன.
30 ஆயிரம் கிலோ சாணி, மக்கிய தொழு உரம், நெல் போன்ற தானியங்களின் உமி 1,000 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 500 கிலோ, பாரிடான் 20 கிலோ இதையெல்லாம் போட்டால் விதைப்பதற்கு நிலம் தயாராகி விடும். ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பார் (பெட்) தயார் செய்து ஒவ்வொரு பாரிலும் இரண்டு வரிசையில் நாற்றுகளை நட வேண்டும். குறுக்கு வாட்டில் 60 செ.மீ., பக்க வாட்டில் 15 செ.மீ. இருக்குமாறு வரிசையில் நடவேண்டும். ஒரு செடிக்கு ஒரு நாளைக்கு நான்கு லிட்டர் தண்ணீர் சொட்டு நீர்பாசன முறையில் விடவேண்டும். மற்றபடி பூச்சிகள் தாக்காமல் இருக்க, மருந்துகளை ஸ்பிரே செய்யலாம். வேறு எந்தப் பூச்சிகளும் குடிலுக்குள் நுழைந்து விடாமலிருக்க வலை களைக் கட்டி பாதுகாப்புச் செய்யலாம்.
செடி வைத்து தண்டு வளரும்போது, கவட்டை வடிவத்தில் இரண்டு தண்டுகளை மட்டுமே வளரவிட்டு மற்ற தண்டுகளை ஒடித்துவிடவேண்டும். அந்த இரண்டு முனைகளிலிருந்தும் அடுத்து தண்டுகள் வளரும்போது, முன்போலவே இரண்டு தண்டுகளை மட்டுமே வளர விடவேண்டும். அடுத்தடுத்து இப்படியே தண்டுகளை பராமரிப்பதன் மூலம் செடியில் காய்கள் நன்கு காய்க்கும். செடி வைத்த ஒரு மாதத்தில் தண்டுகளின் முனைகளில் கயிற்றைக் கட்டி மேன் பக்கமாக இழுத்துக் கட்ட வேண்டும். அப்போதுதான் காயின் பாரத்தை செடி தாங்கும்.
ஒவ்வொரு காயும் பெரிதாகும் அளவுக்கு இடைவெளி விட்டுப் பக்கத்தில் இருக்கின்ற பிஞ்சுகள், மொட்டுகள், இலைகள் எல்லாவற் றையும் கழித்துவிடலாம். காய் நல்ல வடிவத்தில் கிடைப்பதற்கு இது உதவும். தினமும் தவறாமல் இந்த வேலையைச் செய்து வந்தால், ஒரு காய் 300 கிராம் முதல் 500 கிராம் வரை எடை இருக்கும். ஒன்பது மாதம் முடிந்ததும் செடிகளை அழித்துவிட்டு நிலத்தைத் திரும்பவும் சரிசெய்து நாற்றுகளை நடலாம்.
மிகவிவரமாக தன்னுடைய தொழில்நுட் பங்களைப் பட்டியலிட்ட ராஜாராமன், ''என்னைப் பார்த்துட்டு சிறுமலையில் பத்துக்கும் மேற்பட் டவங்க பசுமைக் குடில் அமைச்சி குடைமிளகாய் பயிரிடுற முயற்சியில இறங்கியிருக் காங்க. என்னால முடிஞ்சவரைக்கும் தொழில்நுட்பங் களை பலருக்கும் சொல்லிக்கிட்டிருக்கேன். யார் கேட்டாலும் சொல்றதுக்கு தயாராவே இருக்கேன்'' என்று எல்லோருக்கும் அழைப்பு வைத்தார் (தொடர்புக்கு: 04512558358, 92442-14273).

No comments: