Saturday, March 29, 2014

கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது.

கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது. அக்னி உக்கிரமடைவதற்கு முன்னரே வெயில் நம்மை மிரட்டத் தொடங்கிவிட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு என்று பல தொல்லைகளும் சேர்ந்துகொள்ளும். இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி?
வியர்க்குரு
மனித உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். கோடையில் வளிமண்டல வெப்பநிலை சர்வசாதாரணமாக 40லிருந்து 45 டிகிரியைத் தொடுகிறது. அப்போது உடலைக் குளிர்விக்க அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும்.
இதனால், வியர்க்குரு வரும். வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு வராது. வியர்க்குருவில் காலமின் லோஷனைப் பூசினால் அரிப்பு குறையும்.
வேனல் கட்டி
தோலின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் வியர்க்குருவில் அழுக்குபோல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக்கொள்ள, அந்த இடம் வீங்கிப் புண்ணாகிவிடும். இதுதான் வேனல் கட்டி. இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகள், வலி நிவாரணிகள், வெளிப்பூச்சுக் களிம்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும்.
பூஞ்சை தொற்று
உடலில், ஈரமுள்ள பகுதிகளில் பூஞ்சைக் கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக, வியர்க்குருவில் இத்தொற்றும் சேர்ந்துகொண்டால் அரிப்புடன் கூடிய படை, தேமல் தோன்றும். படையைக் குணப்படுத்தும் களிம்பு அல்லது பவுடரைத் தடவிவர இது குணமாகும். உள்ளாடைகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டால் பூஞ்சை படை வருவது தடுக்கப்படும்.
நீர்க்கடுப்பு
கோடையில் சிறுநீர்க் கடுப்பு அதிகத் தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கியக் காரணம். உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால், சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி, சிறுநீர்ப் பாதையில் படிகங்களாகப் படிந்துவிடும். இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு. நிறையத் தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்சினை சரியாகிவிடும்.
தொற்றுநோய்கள்
வெயில் காலத்தில் சமைத்த உணவு வகைகள் விரைவில் கெட்டுவிடும். அவற்றில் நோய்க்கிருமிகள் அபரிமிதமாகப் பெருகும். இந்த உணவுகளை உண்பதால் பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, சீதபேதி, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரும். ஆகையால், வெயில் காலத்தில் சமைத்த உணவுகளை உடனுக்குடன் பயன்படுத்திவிடுவது நல்லது. உணவு மீது ஈக்கள் மொய்க்காமல் மூடிப் பாதுகாக்க வேண்டியதும் முக்கியம். தண்ணீரைக் கொதிக்கக் காய்ச்சி, ஆறவைத்துக் குடிக்க வேண்டும்.
வெப்பத் தளர்ச்சி
வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது, உடலின் வெப்பம் 106 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் தாண்டிவிடும். அப்போது உடல் தளர்ச்சி அடையும்; களைப்பு உண்டாகும். தண்ணீர்த் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புகள் வெளியேறிவிடுவதால் இந்தத் தளர்ச்சி ஏற்படுகிறது.
வெப்பமயக்கம்
நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்கிறவர்கள் மற்றும் சாலையில் நடந்து செல்கிறவர்கள், திடீரென மயக்கம் அடைவதைப் பார்த்திருப்பீர்கள். இது ‘வெப்ப மயக்க'த்தின் விளைவு. இதற்குக் காரணம், வெயிலின் உக்கிரத்தினால் தோலிலுள்ள ரத்தக்குழாய்கள் மிக அதிகமாக விரிவடைந்து, இடுப்புக்குக் கீழ் ரத்தம் தேங்குவதற்கு வழி வகுக்கிறது; இதனால், இதயத்துக்கு ரத்தம் வருவது குறைந்து, ரத்த அழுத்தம் கீழிறங்குகிறது; மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைப்பதில்லை; இவற்றின் விளைவாக மயக்கம் வருகிறது.
வெப்பமயக்கத்துக்கு முதலுதவி
மயக்கம் ஏற்பட்டவரை குளிர்ச்சியான இடத்துக்குக் கொண்டு செல்லுங்கள். மின்விசிறிக்குக் கீழே படுக்க வைத்து, ஆடைகளைத் தளர்த்தி, காற்று உடல் முழுவதும் படும்படி செய்யுங்கள். தலைக்குத் தலையணை வேண்டாம். பாதங்களை உயரமாகத் தூக்கிவைக்கவும். தண்ணீரில் நனைத்த துணியால் உடல் முழுவதும் ஒற்றியெடுத்துத் துடைக்கவும். இது மட்டும் போதாது. அவருக்குக் குளூக்கோஸ் மற்றும் சலைன் செலுத்த வேண்டியதும் முக்கியம். உடனடியாக அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
தண்ணீர்! தண்ணீர்!
சென்னை போன்ற நகரங்களில் காற்றின் ஈரப்பதம் (Humidity) மிக அதிகமாக உள்ளது. உடலில் ஏற்படும் வியர்வைச் சுரப்பு உடனடியாக ஆவியாகாது. எனவே, உடலின் வெப்பம் குறையாமல் இருக்கும். அதே நேரத்தில், வியர்வை சுரப்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் அளவில்லாமல் வெளியேறி, அதிக நீரிழப்பு ஏற்படுகிறது.
இதனால், உடல் தளர்ச்சி அடைகிறது; களைப்பு உண்டாகிறது. இந்த நிலைமையைத் தவிர்க்க, மணிக்கொரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும். குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தால்கூட, தாகம் எடுக்கவில்லை என்றாலும், கோடைக் காலத்தில் தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம்.
குளிர் பானங்கள் வேண்டாம்!
வெயில் காலத்தில் காபி, தேநீர் குடிப்பதைக் குறைத்துக்கொள்ளுங்கள். வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென்பானங்கள் மற்றும் குளிர் பானங்களைக் குடிக்க வேண்டாம். காரணம், குளிர் பானங்களை வரம்பின்றி அருந்தும்போது, அவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்தக் குழாய்களைச் சுருக்கி, உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது.
இதற்குப் பதிலாக, இளநீர், மோர், சர்பத், பானகம், பதநீர் முதலியவற்றை அதிகமாகக் குடிக்கலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பத்தை உள்வாங்கி, சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன. இதனால், உடலில் நீரிழிப்பால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உடனடியாகக் குறைகின்றன. எலுமிச்சைப் பழச் சாற்றில் சமையல் உப்பு அல்லது சர்க்கரை கலந்து சாப்பிடுவது குறைந்த செலவில் நிறைந்த பலனைப் பெற உதவும்.
பழங்களை அதிகப்படுத்துங்கள்
தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ பழச்சாறுகளையோ அடிக்கடி சாப்பிடுங்கள். இவற்றில் பொட்டாசியம் தாது அதிகமுள்ளது. கோடை வெப்பத்தால் பொட்டாசியம் வியர்வையுடன் வெளியேறிவிடும். இதனால் உடல் களைப்படைந்து, தசைகள் இழுத்துக்கொள்ளும். அப்போது, இப்பழங்களில் உள்ள பொட்டாசியம் அந்த இழப்பை ஈடுகட்டும். கோடையில் வெப்பத் தளர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்கப் பழங்களைச் சாப்பிடுவதுதான் சிறந்த வழி.
எண்ணெய் தவிர்!
கோடையில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட, கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகமுள்ள இனிப்புப் பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள், பர்கர், பீட்சா, ஐஸ்கிரீம் போன்ற சிற்றுண்டிகள் தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் என்பதால், இவற்றையும் தவிர்ப்பதே நல்லது. அதேபோல், சூடான, காரமான, மசாலா கலந்த உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.
சிறந்த கோடை உணவுகள்
இட்லி, இடியாப்பம், தயிர்சாதம், மோர்சாதம், கம்பங்கூழ், அகத்திக்கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, காரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, வெங்காயப் பச்சடி, தக்காளிக் கூட்டு முதலியவை சிறந்த கோடை உணவுகள்.
மாலை வேளைகளில் வெள்ளரி சாலட், தர்ப்பூசணி சூப், தக்காளி சூப், காய்கறி சூப் போன்றவற்றைச் சாப்பிடலாம். கேப்பைக் கூழில் தயிர் விட்டுச் சாப்பிட்டால், உடலின் வெப்பம் உடனே தணியும். காரணம், கேப்பைக் கூழுக்கும், தயிருக்கும் உடலின் வெப்பத்தை உறிஞ்சக்கூடிய தன்மையுண்டு.
வெயிலில் அலையாதீர்!
கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அவசியம் செல்ல வேண்டுமென்றால் குடையை எடுத்துச் செல்லுங்கள். முடிந்தவரை நிழலில் செல்வது நல்லது. முதியவர்கள், குழந்தைகள், உடல்நலம் குறைந்தோர் வெயிலில் அலைவது ஆபத்தை வரவழைக்கும். வெயிலில் அதிக நேரம் பயணிக்க வேண்டியிருந்தால், கண்களுக்கு 'சன் கிளாஸ்' அணிந்து கொள்ளலாம்.
ஆடையில் கவனம்
உடைகளைப் பொறுத்தவரை கோடைக்கு உகந்தது பருத்தி ஆடைகளே. அவற்றில்கூட இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம். கருப்பு உள்ளிட்ட அடர் நிறங்கள் வெப்பத்தைக் கிரகிக்கும். ஆகவே, இத்தன்மையுள்ள ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் செயற்கை இழைகளால் ஆன ஆடைகளையும் தவிர்க்க வேண்டும். வெந்நிற ஆடைகள் கோடைக்கு உகந்தவை. சூரிய ஒளி ஒவ்வாமை உள்ளவர்கள் ‘சன் ஸ்கிரீன்' களிம்பை முகத்திலும் கைகால்களிலும் பூசிக்கொள்ளலாம்.

Wednesday, March 26, 2014

தென்னை... பப்பாளி... வாழை..

தென்னை... பப்பாளி... வாழை...
தென்னையோடு அமைந்திருக்கும் லாப கூட்டணி...
காசி. வேம்பையன் படங்கள்: கா. முரளி
தென்னங்கன்றுகளை நட்டுவிட்டு, பலன் எடுக்க ஆண்டுக் கணக்கில் காத்திருப்பதெல்லாம் அந்தக்காலம். அரை காணி நிலமாக இருந்தாலும், குறுகிய காலத்தில் விளைச்சல் தரும் ரகங்களை நடுவது... கூடவே ஊடுபயிர், அடுக்குப்பயிர்... என்று சில தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து தொடர் வருமானம் பார்ப்பது... இந்தக் கால விவசாய பாணியாக இருக்கிறது! அந்த வகையில், தென்னைக்கு இடையில், பப்பாளி மற்றும் வாழையை சாகுபடி செய்து அசத்திக் கொண்டிருக்கிறார், வேலூர் மாவட்டம், பொன்னம்பலம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி.
ஆரணியில் இருந்து, செய்யாறு செல்லும் சாலையில் பயணித்தால்... இருபதாவது கிலோ மீட்டரில் வருகிறது, கன்னிகாபுரம். இங்கிருந்து வலது பக்கமாகச் செல்லும் சாலையில் இரண்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, பொன்னம்பலம். செழிப்பாக வளர்ந்திருந்த தென்னை, பப்பாளி, வாழை மரங்கள் அடங்கிய தோப்பில் மாசிலாமணியைச் சந்தித்தோம்.
ஆள் பற்றாக்குறையால் மரப்பயிர்கள்!
''எங்களுது பாரம்பரிய விவசாயக் குடும்பம். சின்னப் பிள்ளையா இருக்கறப்பவே... அப்பா, அம்மா ரெண்டு பேருமே இறந்துட்டாங்க. பெரியம்மாதான் வளர்த்தாங்க. காலேஜ்ல பி.எஸ்சி. மேத்ஸ் படிப்புல சேர்ந்த நான், பண வசதி இல்லாததால... படிப்பை பாதியிலேயே விட்டுட்டு, எங்களுக்கு இருந்த ஒன்றரை ஏக்கர் நிலத்துல விவசாயம் பார்க்க வந்துட்டேன். அதுல சுமாரான வருமானம் கிடைச்சுது. கல்யாணம் ஆன பிறகு, மளிகைக் கடை வெச்சேன். அதுல வந்த வருமானம், விவசாயத்துல கிடைச்ச வருமானம் எல்லாத்தையும் போட்டு... ரைஸ்மில் போட்டேன். அந்த சமயத்துல (92-ம் ஆண்டு) விவசாய வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு அதிகமாச்சு. அதனால, தென்னங்கன்றுகளை நட்டுட்டு, வரப்புல தேக்குக் கன்றுகளை நட்டுட்டேன்.
வழிகாட்டிய பயிற்சிகள்!
அப்படியே காலம் ஓடிடுச்சு. என்னோட மூணு பசங்களுக்கும் கல்யாணம் பண்ணி வெச்ச பிறகு, அரசியல்ல இறங்கினேன். 2001-ம் வருஷம் ஊராட்சி மன்றத் தலைவரா ஆனேன். அடுத்தத் தேர்தல்ல தோத்துட்டேன். அப்பறம் அரசியல்ல இருந்து ஒதுங்கி, முழுசா விவசாயத்துல இறங்கினேன். அந்த சமயத்துலதான் 'பசுமை விகடன்’ வெளி வர ஆரம்பிச்சுது. முதல் இதழைப் படிச்சப்பவே... அதுல இருந்த எல்லா தகவலும் எனக்கு ரொம்பப் பிடிச்சு போச்சு. இப்போவரைக்கும் தொடர்ந்து படிச்சுட்டிருக்கேன்.
தேர்தல்ல தோத்தாலும், 'பசுமை விகடன்’ கொடுத்த தெம்பால, இயற்கை விவசாயத்துல இறங்கிட்டேன். 'இனியெல்லாம் இயற்கையே...’, 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சிகள் மூலமா கத்துக்கிட்ட விஷயங்கள வெச்சு... தென்னந்தோப்புல ரெண்டு முறை பல தானிய விதைப்பு செஞ்சு, மண்ணை வளமா மாத்தி, ஊடுபயிரா, ரெண்டு வருஷத்துக்கு காய்கறி சாகுபடி செய்தேன். இப்போ, சோதனை முயற்சியா மூன்று அடுக்குப் பயிரா தென்னைக்கு இடையில இருமடிப்பாத்தி, வட்டப்பாத்தி எடுத்து பப்பாளிச் செடிகளையும், வாழைக் கன்றுகளையும் நட்டிருக்கேன்.
தென்னை நாற்று மூலமும் வருமானம்!
ஒன்றரை ஏக்கர்ல 90 தென்னை மரங்கள் இருக்கு. வரப்புல 100 தேக்கு மரங்கள் நிக்குது. நல்லா வளந்துருக்குற 30 தேக்கு மரங்களை 4 லட்ச ரூபாய் விலைக்குக் கேட்டுட் டிருக்காங்க. தென்னைக்கு இடையில அரை ஏக்கர்ல 500 மொந்தன் வாழை போட்டுருக் கேன். வாழைக்கு இடையில 30 சென்ட்ல 200 'ரெட் லேடி’ பப்பாளி கன்னுகளை நட்டிருக்கேன். இயற்கை விவசாயத்துக்கு மாறி, நாலு வருஷம் ஆகிடுச்சு. முன்ன சராசரியா
100 தேங்காய் காய்ச்ச மரங்கள்ல, இப்போ 150 காய்கள் கிடைக்குது. தேங்காயை உரிச்சு வித்துடறேன். அதில்லாம, நெத்துக்காய்களை நாத்தா வளத்தும் விற்பனை செய்றேன்'' என்றவர், தோப்பைச் சுற்றிக் காட்டினார்.
ஒன்றரை ஏக்கரில்... 4 லட்சம்!
நிறைவாகப் பேசிய மாசிலாமணி, ''90 தென்னை மரங்கள்ல இருந்து மரத்துக்கு 150 காய் வீதம் வருஷத்துக்கு 13 ஆயிரத்து 500 காய் கிடைக்குது. இதுல 7 ஆயிரத்து 500 காய்களை உரிச்சு, ஒரு தேங்காய் 6 ரூபாய்னு வித்துடுவேன். அது மூலமா 45 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மீதி 6 ஆயிரம் காய்களை தென்னங்கன்னுகளா உற்பத்தி பண்ணிடுவேன். எப்படியும் 5 ஆயிரம் கன்னுங்க உருவாகிடும். வருஷத் துக்கு ஆயிரம் கன்னுகள இலவசமா கொடுத்துட்டு, மீதியை 25 ரூபாய் வீதம் விலைக்கு கொடுத்துடுவேன். 4 ஆயிரம் நாத்து மூலமா, வருஷத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வருமானம் கிடைச்சுட்டு இருக்கு.
பப்பாளியில இப்போதான் காய் கிடைக்க ஆரம்பிச்சுருக்கு. 200 பப்பாளி மரங்கள்ல இருந்து வருஷத்துக்கு 10 ஆயிரம் கிலோ அளவுக்கு காய் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன். இப்போதைக்கு ஒரு கிலோ 15 ரூபாய்னு விலை போகுது. இந்தக் கணக்குல பார்த்தா... பப்பாளி மூலமா வருஷத்துக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அரை ஏக்கர்ல இருக்கற 500 வாழை மூலமா, ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்.
நான் எதிர்பார்த்தபடி விளைஞ்சு வந்துச்சுனா, அடுத்தடுத்த வருஷங்கள்ல ஒன்றரை ஏக்கர்ல இருந்து, வருஷத்துக்கு 4 லட்ச ரூபாய் வரைக்கும் வருமானம் எடுத்துடுவேன். செலவெல்லாம் போக எப்படியும் வருஷத்துக்கு மூணு லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும்'' என்று உற்சாகமாக விடைகொடுத்தார்!
தொடர்புக்கு:மாசிலாமணி,
செல்போன்: 86810-25763.

5 ஆண்டுகளுக்குப் பிறகு அடுக்குப் பயிர்!
தென்னைக்கு இடையில் அடுக்குப் பயிர் சாகுபடிக்காக மாசிலாமணி சொல்லும் தொழில்நுட்பங்கள்...

''தென்னைக்குத் தென்னை அதிகபட்சம் 27 அடி இடைவெளி கொடுத்து நடவு செய்ய வேண்டும். நடவு செய்ததில், இருந்து நான்கு ஆண்டுகளுக்கு பயறு, தானியங்கள், காய்கள் மாதிரியான குட்டையான பயிர்களை ஊடு பயிராக சாகுபடி செய்யலாம். ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான் வாழை, பப்பாளி போன்றவற்றை நடவு செய்ய வேண்டும்.
பலதானிய விதைப்பு!
தென்னைக்கு இடையில் பல தானியங்களை விதைத்து பூ எடுத்ததும் மடக்கி உழ வேண்டும். கம்பு, கேழ்வரகு, சோளம், சாமை, வரகு போன்ற தானியங்களில் ஏதாவதொன்றில் 4 கிலோ; காராமணி, துவரை, அவரை, கொண்டைக்கடலை, மொச்சை, உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறுகளில் ஏதாவதொன்றில் 4 கிலோ; நிலக்கடலை, சோயா, ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துக்களில் ஏதாவதொன்றில் 4 கிலோ; சோம்பு, தனியா, மிளகு, சீரகம் போன்ற வாசனைப் பொருட்களில் ஏதாவதொன்றில் 1 கிலோ; சணப்பு, தக்கைப்பூண்டு, அவுரி, கொழுஞ்சி போன்ற பசுந்தாள் உரப் பயிர்களில் ஏதாவதொன்றில் 4 கிலோ... எனக் கலந்து விதைத்து, பூவெடுத்ததும் மடக்கி உழுவதுதான் பல தானிய விதைப்பு (எண்ணெய்வித்துப் பயிர்களில் கடுகு, எள் போன்றவற்றைப் பயன்படுத்தினால் ஒரு கிலோ மட்டுமே போதுமானது).
இருமடிப்பாத்தி!
பல தானியச் செடிகளை மடக்கி உழுது, பதினைந்து நாட்கள் கழித்து, இரண்டடி இடைவெளியில், நான்கு அடி அகலத்துக்கு நீளவாக்கில் இருமடிப்பாத்தி அமைக்க வேண்டும். பாத்திகளில் ஒரு பக்கத்தில் 8 அடி இடைவெளியில், ஒரு கன அடி அளவுக்குக் குழி எடுத்து, வாழை நடவு செய்ய வேண்டும். பாத்தியின் மறுபக்கத்தில், முக்கோண நடவு முறையில், இரண்டு வாழைகளுக்கு இடையில் ஒரு பப்பாளி வருவது போல நடவு செய்ய வேண்டும். அதாவது, 8 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழி எடுத்து, பப்பாளிச் செடிகளை நடவு செய்ய வேண்டும்.
நடவுக்கு முன்பு ஒவ்வொரு குழியிலும் 10 கிலோ அளவுக்கு ஊட்டமேற்றிய தொழுவுரத்தை இட்டு நடவு செய்ய வேண்டும். ஒரு டன் எரு, தலா 20 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, 50 லிட்டர் ஜீவாமிர்தம் அல்லது 5 லிட்டர் பஞ்சகவ்யா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து நிழலான இடத்தில் குவித்து... தென்னை மட்டைகளால் மூடி ஒரு மாதம் கழித்து தண்ணீர் தெளித்து புரட்டி விட வேண்டும். மீண்டும் ஒரு மாதத்துக்கு அப்படியே வைத்துவிட்டால், ஊட்டமேற்றிய தொழுவுரம் தயார்.
மாதம் 100 லிட்டர்!
மாதம் ஒரு முறை, பாசன நீருடன் 100 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலந்து விட வேண்டும். இலை, தழை மற்றும் தோப்பில் கிடைக்கும் கழிவுகளை பாத்திகளின் மீது மூடாக்காகப் போடலாம். நடவு செய்த 6-ம் மாதத்தில் மரத்துக்கு 10 கிலோ வீதம் ஊட்டமேற்றிய தொழுவுரம் இட்டு மண் அணைக்க வேண்டும். இயற்கை முறையில் பெரும்பாலும் பூச்சிகள் வராது. அப்படியும் வந்தால், இயற்கைப் பூச்சிவிரட்டி தெளிக்கலாம்.
நடவு செய்த 4-ம் மாதத்தில் பப்பாளியில் பூவெடுக்கத் தொடங்கும். அந்த சமயத்தில், 10 பெண் மரங்களுக்கு ஒரு ஆண் மரம் என்ற கணக்கில் விட்டுவிட்டு, மீதி ஆண் மரங்களைக் கழித்து விட வேண்டும். இரண்டு ஆண்டுகள் வரை பப்பாளியில் மகசூல் எடுக்கலாம். அதன் பிறகு மொத்த மரங்களையும் அகற்றி, புதிதாக கன்றுகளை நடவு செய்ய வேண்டும். வாழை... 9-ம் மாதம் குலைதள்ளி, 12-ம் மாதத்தில் அறுவடைக்கு வரும்.''

Friday, March 14, 2014

Chuma

கலை மகள் துணை கொண்டு கலை வென்று
புகழ் கொண்ட காவலன் வாழ்க வாழ்க
மலை மகள் வரம் கொண்டு மலை போன்ற
பலம் கொண்ட மன்னவன் வாழ்க வாழ்க
திரு மகள் அருள் கொண்டு பொருள் கொண்ட
திருவருட்செல்வனே வாழ்க வாழ்க
இயல் இசை நாடகம் முத்தமிழ்
காக்கின்ற தலைவனே வாழ்க வாழ்க
குடி மக்கள் மனம் போல முடியாட்சி
காண்கின்ற கொற்றவா வாழ்க வாழ்க
நின் கொடி வாழ்க படை வாழ்க குடி வாழ்க
குலம் வாழ்க நலமும் பல்லாண்டு வாழ்க வாழ்க ...

Monday, March 10, 2014

ஆறே மாதத்தில்... 69 ஆயிரம்... அசத்தல் வருமானம் தரும் ஆடு வளர்ப்பு...

ஆறே மாதத்தில்... 69 ஆயிரம்... அசத்தல் வருமானம் தரும் ஆடு வளர்ப்பு...
ஆர். குமரேசன், ஜி. பழனிச்சாமி படங்கள்: தி. விஜய், வீ. சிவக்குமார்
 கால்நடை
அணுவைக் கொண்டு ஆக்கல், அழித்தல் என்ற இரண்டு வேலைகளையும் செய்வது போலத்தான் தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியும். ஆக்கமா... அழிவா... என்பது நாம் பயன்படுத்தும் முறையில் தான் இருக்கிறது. அந்த வகையில், இன்றைக்கு சமூகச் சீர்கேடுகளில் ஒன்றாக 'ஃபேஸ்புக்' எனும் 'முகநூல்' விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த முகநூல் மூலமாகவே நண்பர்களாகி, விவசாயத்திலும் ஆடு வளர்ப்பிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள் நான்கு இளைஞர்கள் என்றால், ஆச்சர்ய சங்கதிதானே!
விருதுநகரைச் சேர்ந்த விஜயகுமார், சிங்கப்பூரில் இருக்கும் ராமசாமி, கோயம் புத்தூரில் இருக்கும் எத்திராஜ், ஓமன் நாட்டில் இருக்கும் நவநீதகிருஷ்ணன் ஆகிய நால்வரும் தங்கள் பணிகளுக்கு இடையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்வதுடன், கொட்டில் முறை ஆடு வளர்ப்புத் தொழிலையும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
நத்தம்-மதுரை சாலையில் 7-வது கிலோ மீட்டரில் வருகிறது சாத்தாம்பாடிவிலக்கு. இங்கிருந்து இடதுபுறம் திரும்பும் தார்சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் வருகிறது சாத்தாம்பாடி. சாலையை ஒட்டியுள்ள மாமரங்களுக்கு இடையில் இருக்கிறது இவர்களுடைய பசுமைப் பண்ணை. நாம் அங்கே ஆஜரானபோது... ஆடுகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்த விஜயகுமார், நம்மை உற்சாகத்துடன் வரவேற்றுப் பேசினார்.
''எனக்குச் சொந்த ஊரு விருதுநகர். அடிப்படையில ஒரு இன்ஜினீயர். நாலு வருஷமா 'பசுமை விகடன்' படிச்சுட்டு வர்றேன். அதை படிக்கப் படிக்க விவசாயத்து மேல ஆர்வம் வந்துடுச்சு. அதேபோலவே நண்பர்கள் மூணு பேரும் 'பசுமை விகடன்' வாசிக்கறவங்கதான். நாங்க, நாலு பேரும் இன்ஜினீயர்ங்கிற அடிப்படையிலதான் நட்பானோம். ஃபேஸ்புக்ல அப்பப்ப கமெண்ட் போட்டுக்குவோம். அதுல பெரும் பாலும் விவசாயம் தொடர்பான விஷயத்தைப் பத்தித்தான் பேசுவோம். பசுமை விகடன்ல படிச்ச செய்தியைப் பத்தி விவாதிச்சுக்கு வோம்.
பாதை காட்டிய பசுமை விகடன்!
2012 டிசம்பர்ல இருந்து ரொம்ப நெருக்கமான நண்பர்களாயிட்டோம். 2013 ஜனவரியில நாலு பேரும் நேர்ல சந்திக்கத் திட்டமிட்டோம். ராமசாமியின் சொந்த ஊரான சிவகாசி அருகே உள்ள வடமலா புரத்தில் நாலுபேரும் குடும்பத்தோட ஆஜராகி, ஒருத்தருக்கு ஒருத்தர் மனசுவிட்டு பேசிக்கிட்டோம். அதுவரைக்கும் 'ஃபேஸ்புக்' நண்பர்களா இருந்த நாங்க, அதிலிருந்து குடும்ப நண்பர்களா கிட்டோம். ஒரு கட்டத்துல, 'எல்லாரும் சேர்ந்து ஏன் விவசாயம் செய்யக் கூடாது?'னு முடிவு செஞ்சோம். நண்பர்கள் மூணு பேரும் வெளியூர்ல இருக்கறதால, நான் மட்டுமே பண்ணையைப் பாத்துக் கறதுனு முடிவாச்சு. உடனே ராமசாமியோட மாமியார் தோட்டத்தை, குத்தகைக்கு எடுத் தோம்.
இந்த 40 ஏக்கர் தோட்டத்துல... 20 ஏக்கர் மா, 17 ஏக்கர் தென்னை இதெல்லாம் இருக்கு. இங்க இருக்கற மூணு கிணத்துலயும் தாராளமான தண்ணியும் கிடைக்குது. அதனால, ஒருங்கிணைந்தப் பண்ணையா இதை மாத்த நினைச்சோம். கிணத்துல விரால் மீன் வாங்கி விட்டோம். பிறகு, நாட்டுக்கோழி வளர்க்கலாம்னு 50 கோழிகளையும் வாங்கினோம். அந்த நேரத்துல 'பசுமை விகடன்' தண்டோரா பகுதியில வந்த விளம்பரத்தைப் பாத்துட்டு, திண்டுக்கல், கால்நடை அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்துல நடந்த ஆடு வளர்ப்புப் பயிற்சியில கலந்துக்கிட்டேன். அதுக்குப் பிறகு, ஆட்டுப்பண்ணை வெக்குற ஆர்வம் வந்துச்சு. பசுமை விகடன் மூலம் அறிமுகமான ஆட்டுப் பண்ணைகள நேர்ல போய் பாத்தோம். பல பண்ணைகளைப் பாத்ததுல... 'தலைச்சேரி ஆடுகளை வாங்கி, போயர்ல கிராஸ் பண்ணி குட்டி எடுத்து வித்தா நல்ல லாபம் வரும்!'னு தெரிஞ்சுக் கிட்டோம்'' என்று சொன்ன விஜயகுமார், அடுத்தக் கட்டமாக நண்பர்களுடன் ஆலோசித்து, களத்திலும் இறங்கியிருக் கிறார்.
பரண்ல ஆடு... பள்ளத்துல கோழி!
''அம்மன் ஆட்டுப்பண்ணை உரிமை யாளர் சதாசிவத்துகிட்ட ஆலோசனை செஞ்சோம். அவரு சொன்னபடி தென்னைக்கு இடையில, கோ-4, அகத்தி, வேலிமசால், கோ.எஃப்.எஸ்-29 மாதிரி யான பசுந்தீவனங்களை விதைச்சோம். எடுத்தவுடனே பெருசா பண்ணாம சின்ன அளவுல ஆரம்பிச்சு, நெளிவு, சுளிவுகளைத் தெரிஞ்சுக்கிட்டு பிறகு, பெருசா பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். தீவனப் பயிரெல்லாம் வளர்ந்த பிறகு, ஆட்டுபண்ணைக்கான கொட்டில் அமைச்சோம். கொட்டகையை நானே டிசைன் பண்ணி அமைச்சேன். 60 அடி நீளம், 30 அடி அகலத்துல 5 அடி உயரத் துல கொட்டில் அமைச்சுருக்கோம். உள்ளே குட்டிகளுக்கு தனி அறை, சினை ஆடுகளுக்கு தனி அறை, இனப் பெருக்கத்துக்கு தனி அறைனு பிரிச்சுருக்கோம். ஜி.எல் ஸீட் கூரைதான் போட்டிருக்கோம். இதனால, வெப்பம் அதிகமா உள்ள வராது. ஆஸ்பெஸ்டாஸ் மாதிரி சீக்கிரமா உடையாமலும் இருக்கும். இந்த அளவுல குடில் அமைக்க, 6 லட்ச ரூபாய் செலவாச்சு. கொட்டகை உயரமா இருக்கறதால, பரண்ல ஆடு... பள்ளத்துல நாட்டுக்கோழினு விட்டுட்டோம். சுத்தியும் ஆடுகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள நைலான் வலையை வெச்சு அடைச்சுருக்கோம். கீழ விழுற ஆட்டுப் புழுக்கையில உற்பத்தியாகுற புழு, பூச்சிகளைக் கோழிக தின்னுக்கும்.
ரெண்டு வருஷத்துல மொத்த முதலீட்டையும் எடுத்துடுவோம்!
2013-ம் வருஷம் ஆகஸ்ட் கடைசியில... 30 பெட்டை ஆடு, ஒரு கிடானு வாங்கிட்டு வந்து கொட்டகையில விட்டோம். முப்பது ஆடுகளையும் ஒரே வயசுல வாங்காம, குட்டி, சினையாடு, இனப்பெருக்கத்துக்குத் தயாரா இருக்கற ஆடுனு பல ரகமா வாங்கிட்டு வந்தோம். 6 மாசம் முடிஞ்சுருக்கு. இப்ப கையில
16 குட்டிகள் இருக்கு. காலையில ஏழு மணிக்கு பசுந்தீவனத்தை வெட்டிட்டு வந்து அரை மணி நேரம் ஆறப்போட்டு, பிறகு மெஷின்ல சின்னச்சின்னதா வெட்டுவோம். 9 மணிக்கு மேல பசுந்தீவனத்தைக் கொடுப்போம். அரைமணி நேரம் கழிச்சு தண்ணி வெப்போம். 11 மணி வாக்குல கொட்டகையைவிட்டு கீழ இறக்கி, கொட்டகையைச் சுத்தி இருக்கற காலி இடத்துல காலாற நடக்க விடுவோம். திரும்பவும் ஒரு மணிக்கு கொட்டகையில ஏத்தி, தீவனமும், தண்ணியும் வெப்போம்.
மருத்துவர்கள் ஆலோசனைப்படி மாசம் ஒரு தடவை குடற்புழு நீக்கம் செஞ்சுடுவோம். மருத்துவர்களோட ஆலோசனைப்படி செய்றதால, எந்தத் தொந்தரவும் இல்லாம போயிட்டு இருக்கு.
ஆறே மாசத்துல 16 குட்டிக கிடைச்சது... எங்களுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. இன்னும் ரெண்டு வருஷத்துல மொத்த முதலீட்டையும் எடுத்திடுவோம். ஆட்டுப்புழுக்கை மட்டும் மாசம் ஒரு டன் பக்கமா வருது. அதை பசுந்தீவனங்களுக்கும் தென்னைக்கும் உரமா பயன்படுத்திக்குறோம்'' என்ற விஜயகுமார்,
''இப்போதைக்கு எல்லாமே சோதனை முயற்சியாதான் பண்ணிட்டிருக்கோம். இதையே பெரிய அளவுல செய்யுறப்ப... அதிக லாபம் கிடைக்கும்னு நம்புறோம். நாங்க நாலு பேரும் ஆசைப்பட்டபடி இந்தத் தோட்டத்தை சிறந்த 'ஒருங்கிணைந்தப் பண்ணை'யா மாத்துவோம்ங்கிற நம்பிக்கை இப்ப நல்லாவே வந்திருக்கு'' என்றார், பளீரிடும் முகத்துடன்!
எதையும் பிளான் பண்ணி பண்ணனும்!
இவர்களுக்குத் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கிவரும் சதாசிவத்திடம் பேசியபோது, ''இன்னிக்கு இருக்கற சூழல்ல விவசாயத்தோட கால்நடை வளர்ப்பையும் செஞ்சாதான் வருமானம் பார்க்க முடியும். பொதுவா ஆடுக இருந்தா வெள்ளாமையைக் கடிச்சுப் போடும்னு ஒரு பயம் இருக்கும். இப்ப அந்த பயமே தேவையில்ல. கொட்டில் முறையில ஆடுகளை வளர்த்தா... ஒரே ஆளு,
100 ஆடுகள் வரை பராமரிக்கலாம். பொதுவா ஆட்டுப்பண்ணைத் தொழில்ல இறங்குற ரொம்ப பேரு தோத்துப் போறதுக்கு காரணம்... முறையான திட்டம் இல்லாதது தான்.
முதல்ல பசுந்தீவனங்களை உற்பத்தி செய்யணும். தீவனம் இல்லாம பண்ணை அமைக்கறதுக்கு இறங்கக் கூடாது. அதேபோல கொட்டகைக்கு அதிக முதலீடு போட்டுட்டு, ஆடு வாங்க காசில்லாம கஷ்டப்படக் கூடாது. முடிஞ்சவரை கொட்டகைச் செலவை குறைச்சா நல்லது. பலரும் எடுத்த எடுப்பிலேயே நூறு ஆடு, இருநூறு ஆடுகனு இறக்கிடுவாங்க. அது ரொம்ப தப்பு. ஆரம்பத்துல இருபது, முப்பது ஆடுகளை வெச்சு, பண்ணையை ஆரம்பிச்சு, நல்ல அனுபவம் வந்த பிறகு அதிகப்படுத்திக்கலாம். தீவனத்தையும், மருந்தையும் சரியா கொடுத்து பராமரிச்சா... ஆட்டுப்பண்ணை மாதிரி லாபமான தொழில் எதுவும் இல்லை.
முதலீடு ரெண்டு மடங்கு அதிகமாகும்!
கொட்டில் முறையில வளர்க்கறதுக்கு தலைச்சேரிபோயர் கிராஸ் ஆடுகள்தான் சிறந்தது. சீக்கிரம் எடை வரும். இன்னிக்கு நிலமையில வளர்ப்பு ஆடு, உயிர் எடையா கிலோ 350 ரூபாய்க்கும், கறி ஆடு உயிர் எடை 250 ரூபாய்க்கும் போகுது. 30 ஆடுக வாங்க கிட்டத்தட்ட ஒண்ணரை லட்ச ரூபாயும், கொட்டில் அமைக்க நாலு லட்ச ரூபாய், பசுந்தீவனம் மத்த விஷயங்களுக்காக ஒரு 50 ஆயிரம்னு மொத்தம் ஆறு லட்ச ரூபாய் தேவைப்படும். இதுக்கு வங்கிகள்ல கடனுதவியும் கிடைக்குது. பண்ணை ஆரம்பிக்க நினைக்கறவங்க, பல பண்ணை களை நேர்ல போய் பாக்கணும். தரமான ஆடுகளா வாங்கிட்டு வந்து, பண்ணையை ஆரம்பிக்கலாம். ஒரே வயசுள்ள ஆடுகளா வாங்கக் கூடாது. சின்னது பெருசுனு பல வயசுள்ள, தெம்பான, நோய் தாக்குதல் இல்லாத ஆடுகளா பாத்து வாங்கணும்'' என்ற சதாசிவம்,
''ஒரு ஆடு, ஒன்பது மாசத்துல பருவத்துக்கு வரும். அதிலிருந்து 8-வது மாசம் குட்டிப் போடும். ஒரு ஆடு ரெண்டு வருஷத்துல மூணு முறை குட்டிப் போடும். தலைச்சேரி ஆடுக ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிப் போடும். அப்ப ரெண்டு வருஷத்துல ஆறு குட்டி கிடைக்கும். தோராயமா ஆறாயிரம் ரூபாய்க்கு வாங்குற ஆடு மூலமா... ரெண்டு வருஷத்துல 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்டிக கிடைச்சுடும். இப்படி முதலீடு ரெண்டு மடங்கா வேறெந்த தொழில்ல பெருகும்?'' என்று கேட்டார் சிரித்தபடியே!

 ஓமனிலிருந்து ஒரு ஆட்டுப்பண்ணை!
தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களிடமும் விவசாய ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது பசுமை விகடன். அந்த வகையில், ஓமன் நாட்டிலிருந்தபடி, தன் மனைவி மூலமாக ஆட்டுப் பண்ணைத் தொழிலை மேற்கொண்டிருக்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த மணி. மாஸ்திகவுண்டன்பதி கிராமத்தில்தான் இருக்கிறது, இவருடைய கொட்டில் முறை ஆட்டுப்பண்ணை. 4 போயர் உட்பட 60 தலைச்சேரி ஆடுகளை இதில் வளர்த்து வரும் மணியின் மனைவி தமிழ்ச்செல்வி, ஆடு வளர்ப்புக்கு தாங்கள் மாறிய கதையை கலகலவென சொன்னார்.
''சொந்த ஊரு கோயம்புத்தூருதான். என்னோட கணவர், ஒரு இன்ஜினீயர். அவர், வளைகுடா நாடுகள்ல வேலை பார்க்கறதால... 29 வருஷமா அங்கதான் இருந்தோம். ஓய்வுநேரத்துல 'ஃபேஸ்புக்' பார்க்கற வழக்கம் அவருக்கு உண்டு. அதுலயும் விகடன் குழும இதழ்களோட 'ஃபேஸ்புக்' எல்லாத்தையும் விடாமல் பார்ப்பார். அப்படி பசுமை விகடன் 'ஃபேஸ்புக்' பார்க்க ஆரம்பிச்சதுல, விவசாயம், கால்நடை வளர்ப்பு மேல அவருக்கு ஆர்வம் வந்துடுச்சு.
ஏற்கெனவே இந்த கிராமத்துல தண்ணீர் வசதியோட ஒண்ணரை ஏக்கர் நிலம் எங்களுக்கு இருந்துச்சு. சில வருஷத்துல ஊர் திரும்பி, அதுல வீடுகட்டி குடியிருக்கலாம்னு யோசனை எங்களுக்கு இருந்துச்சு. ஆனா, ஆட்டுப்பண்ணை அமைக்க லாம்கிற ஆர்வம் காரணமா என்னை மட்டும் ஊருக்கு அனுப்பினார். உடனடியா ஆட்டுபண்ணையை உருவாக்கிட்டேன். தினமும் போன் மூலம் தகுந்த ஆலோசனைகளை அங்கிருந்தபடியே சொல்லிட்டு வர்றார் கணவர்'' எனும் தமிழ்செல்விக்கு, ஆட்டுப் பண்ணை அமைக்க, மொத்தம் ஆன செலவு 14 லட்சம் ரூபாய்.
''60 க்கு 40 அடி நீளத்தில் 7 அடி உயரமுள்ள பால்கனி மீது 7 அடி உயரம் கொண்ட செட் அமைச்சு இருக்கோம். தீவனப்புல் 1 ஏக்கர்ல போட்டிருக்கோம். அடர்தீவனமும் கொடுக்கிறோம். பண்ணை அமைச்சு 3 மாசம்தான் ஆச்சு. இப்ப 7 குட்டிகள் புது வரவா வந்திருக்கு. இன்னும் 10 மாசம் கழிச்சுத்தான் வருமான கணக்கு சொல்லமுடியும்.
ஆடுவளர்க்கற அனுபவ விவசாயிகள்கிட்டயும், தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி மையம் நடத்தின ஆடுவளர்ப்புப் பயிற்சியிலும் கலந்துக்கிட்டு நிறைய தொழில்நுட்பங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். இப்ப பக்காவான ஆடுவளர்ப்பு விவசாயியா மாறிட்டேன்.  இது மொத்தத்துக்கும் காரணமே பசுமை விகடன்தான்'' என்று ஆட்டுக்குட்டிகளைச் செல்லமாக அணைத்தபடி சொன்னார் தமிழ்ச்செல்வி.
மணியிடம் தொலைபேசி மூலமாக பேசியபோது, ''எனக்கு ரெண்டு பொண்ணுங்க. மூத்தப் பொண்ணுக்கு கல்யாணமாகிடுச்சு. மாப்பிள்ளையும் ஓமன்லதான் வேலை பாக்கறாரு. ரெண்டாவது பொண்ணு, சொந்த ஊர்லயே காலேஜ் படிக்கறா. பசுமை விகடன் படிச்ச பிறகு, 'வெளிநாட்டுல வேலை பாத்தது போதும். சொந்த ஊருக்குப் போய் விவசாயம் பாக்கலாம்’னு முடிவு பண்ணியிருந்தேன். ஆள் பற்றாக்குறை இருக்கறதால, பராமரிப்பு குறைவான, சந்தை வாய்ப்புள்ள ஆடு வளர்ப்புத் தொழிலைத் தேர்ந்தெடுத்திருக்கேன். தீவனம் வெட்டிப் போடுறதுக்கு ஒரு ஆளை மட்டும் வேலைக்கு வெச்சுருக்கோம். பராமரிப்புச் செலவை எந்தளவுக்குக் குறைக்கிறோமோ அந்தளவுக்கு லாபம் அதிகரிக்கும். ஆரம்பத்துல ஒரு ஆட்டுக்கான பராமரிப்புச் செலவு, ஒரு மாசத்துக்கு 14 ரூபாயா இருந்துச்சு. இப்ப 10 ரூபாயா குறைச்சுருக்கோம் (தீவனம் தவிர்த்து). சீக்கிரமே நானும் இந்தியாவுக்குத் திரும்பி, ஆடு வளர்ப்புல முழு கவனம் செலுத்தப் போறேன்'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார், மணி.
மணியுடன் தொடர்புகொள்ள :
mrtmani@yahoo.co.in
தொடர்புக்கு,
விஜயகுமார்,
செல்போன்: 93444-16089

Saturday, March 01, 2014

நிலத்துக்குள் நீரைச் சேமிக்கும் எளிய மந்திரம்!

நிலத்துக்குள் நீரைச் சேமிக்கும் எளிய மந்திரம்!

நிலத்தடி நீர் சேமிப்புப் பணிகள்தான் ராலேகண்சித்தி கிராமத்தை இன்றைக்கு உலகறியச் செய்திருக்கின்றன. அந்தப் பணியொன்றும் அத்தனை எளிதாக அண்ணாவுக்குக் கைகூடி விடவில்லை. காரணம், அந்த நிலத்தின் இயற்கை அமைப்பு அப்படி. 15 முதல் 20 அடி ஆழம் வரைதான் மண் கண்டம். அதற்குக் கீழே கடினப் பாறை. கசிவுநீர்க் குட்டைகள், பண்ணைக் குட்டைகள் எல்லாம் அமைத்தார்கள். ஆனால், அதில் தேங்கிய நீர், சிமென்ட் தொட்டியில் உள்ள நீரைப் போல அப்படியே இருந்தது. பழையபடியே கிணறுகள் வறண்டுதான் கிடந்தன.
'என்ன காரணம்?' என்று ஆய்வில் இறங்கியபோதுதான், பாறைகள் தடுக்கின்றன என்ற விஷயத்தைக் கண்டறிந்தனர். உடனே கசிவுநீர்க் குட்டைகள், பண்ணைக் குட்டைகள் அமைத்த இடங்களின் அருகே 100 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறுகள் (போர்வெல்) அமைத்தனர். கிடைத்த மழைநீரையெல்லாம் ஆழ்துளை கிணற்றுக்குள் சென்று சேரும் வகையில் வழி செய்தனர். என்ன ஆச்சர்யம்... அடுத்தப் பருவத்தில் மழை பெய்தவுடன் பக்கத்தில் இருந்த கிணறுகளில் நீர்மட்டம் கூடியது. கசிவுநீர்க் குட்டைகளில் இருந்த நீரும் மெள்ள நிலத்துக்குள் இறங்கத் தொடங்கியது.
பிறகென்ன... தடையில்லாதப் பாசனத்தின் மூலம் விவசாயம் விரிவடைய ஆரம்பித்துவிட்டது.