Wednesday, November 05, 2014

'கடுகு சிறுத்தாலும்... காரம் குறையாது!

நம்ம ஊரு வைத்தியம் - 3
எட்வர்ட்
ஹெல்த்
'கடுகு சிறுத்தாலும்... காரம் குறையாது!' காரம் மட்டுமில்லீங்க... அதுல மருத்துவ குணங்களுக்கும் குறைவில்லை. அதனாலதான், நம்மோட பெரும்பாலான சமையல்லயும் அதுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க. எந்த சமையலா இருந்தாலும், அதைத் தாளிக்கறதுக்கு கடுகை பயன்படுத்தறத பழக்கப்படுத்திட்டு போயிருக்காங்களே... புண்ணியவானுங்க அதைத்தான் பெருமையோட சொல்றேன்!
கை-கால் வலி, மூட்டுவலி, வாயு பிடிப்பு, அடிபட்டு ரத்தம் கட்டுதல்னு பலவித பிரச்னைகளுக்கும் கடுகு நல்ல பலன் கொடுக்கும். பாதிக்கப்பட்ட இடத்துல பூசுறதுக்கு தேவையான அளவு கடுகை எடுத்து, தண்ணி விட்டு அரைச்சுக்கங்க. பிறகு, அதை லேசா சூடு காட்டி பத்து போட்டா... கை-கால் வலியில இருந்து எல்லா பிரச்னைகளும் சரியாகும். தேவைப்பட்டா... கொஞ்சம் பெருங்காயமும் சேர்த்துக்கிடலாம்.
மேல சொன்ன பிரச்னைகளுக்கே... இன்னொருவிதமான கடுகு வைத்தியமும் கைவசம் இருக்கு. அதாவது... 10 கிராம் முருங்கைப்பட்டை, பெருங்காயம் ஒரு புளியங்கொட்டை அளவு, கடுகு ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணி விட்டு மையா அரைக்கணும். பிறகு, அதை கொதிக்க வெச்சு பொறுக்குற சூட்டுல பத்து போட்டா... எல்லா வலிகளும் பறந்துரும். ஒருநாளைக்கு ஒருவேளை வீதம், மூணு நாளைக்கு இப்படி பூசிட்டு வந்தா... நல்ல குணம் கிடைக்கும்.
சிலர் தொடர்ந்து இருமிக்கிட்டே இருப்பாங்க. இதுக்கு கடுகை பொடியாக்கி, அரை கிராம் அளவு எடுத்து தேன் சேர்த்து காலை, மாலைனு 2 நாள் சாப்பிட்டு வந்தா... கட்டாயம் பலன் கிடைக்கும்.
இப்படித்தான் 25 வயசு மதிக்கக் கூடிய ஒரு இளைஞர் தொடர் இருமல்ல அவதிப் பட்டிருக்கார். இதுக்கு என்னென்னவோ சிகிச்சை எடுத்தும் பலன் கிடைக்கல. இருமி கிட்டே என்கிட்ட வந்து விஷயத்தைச் சொன்னார். 'இந்த கடுகுப்பொடியை சாப்பிடுங்க..'னு சொல்லி அனுப்பினேன். சொன்னபடியே ரெண்டு நாளைக்குச் சாப்பிட்டவர்... ''ஐயா, நீங்க சொன்னபடியே இருமல் நின்னுபோச்சு''னு அவர் போன் பண்ணினப்ப, எனக்கு அத்தனை சந்தோஷம்!  
- நோய்கள் விலகும்...